தமிழ்நாடு

கொரோனா கால மகத்துவர்: முடங்கிக் கிடப்பவர்களுக்கு 3 வேளையும் உணவளிக்கும் தொண்டு நிறுவனம்

kaleelrahman

கொரோனா பேரிடர் இரண்டாம் அலையின் தாக்கம் மனித குலத்தை வெகுவாக பாதித்து கோரத்தாண்டவமாடி வருகிறது. பொது முடக்கத்தால் வேலை இழந்து, வருவாய் இழந்து, வீட்டிற்குள்ளேயே முடங்கிக் கிடக்கும் மனித குலத்தையும் உழைக்கும் மக்களையும் பாதுகாக்கும் ஒரு சிறிய முயற்சியில் பட்டுக்கோட்டை சதா சோசியல் வெல்பர் ஹெல்ப்லைன் மூவ்மென்ட் ஈடுபட்டு வருகிறது.

பட்டுக்கோட்டை மேலத்தெருவிலிருந்து புலம்பெயர்ந்து பல்வேறு வெளியூர்களில் வெளி மாநிலங்களில் பணிபுரியும் கொடையாளர்களின் உதவியுடன் சதா சோசியல் வெல்பர் ஹெல்ப்லைன் மூவ்மென்டின் நிர்வாகிகள் இணைந்து இன்று (19.05.2021) பட்டுக்கோட்டை மேலத்தெரு 33 வது வார்டு மக்களுக்கு பசியாற உணவு வழங்கப்பட்டது.

நிர்வாகத்தின் சார்பாக கொரானாவின் தாக்கம் கட்டுக்குள் வரும்வரை பொதுமக்கள் இயல்பு நிலைக்கு திரும்பும் வரை பொதுமக்களுக்கு காலை, மதியம், இரவு என மூன்று வேளையும் உணவு வழங்குவது என்று தீர்மானிக்கப்பட்டுள்ளதாக சதா சோசியல் வெல்பர் ஹெல்ப்லைன் மூவ்மென்டின் நிர்வாகி சதா சிவக்குமார் தெரிவித்தார்.

அதேபோல பட்டுக்கோட்டை ஆலயம் அறக்கட்டளை சார்பில் இன்று (19-5-2021) ஆலயம் அறக்கட்டளை ஆண்டுக்கு 200 நாட்கள் உணவு வழங்கும் திட்டத்தின் கீழ் பட்டுக்கோட்டை மயில்பாளையம் சதீஷ்குமார் உதவியோடு பட்டுக்கோட்டை அரசு மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வரும் நோயாளிகள், கர்ப்பிணி பெண்கள், முதியவர்கள் மற்றும் ஆதரவற்றோர்களுக்கு காலை உணவாக இட்லி வடை பொங்கல் வழங்கப்பட்டது.

- காதர் உசேன்