திருவள்ளூரில் கொரோனாவால் பாதிக்கப்பட்டு அரசு மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வந்தவர் மருத்துவமனையிலேயே தூக்கிட்டு தற்கொலை செய்துகொண்டார்.
திருவள்ளூரில் கொரோனா பாதிப்பு நாளுக்கு நாள் அதிகரித்து வருகிறது. நேற்றைய நிலவரப்படி திருவள்ளூர் மாவட்டத்தில் ஒரே நாளில் 105 பேர் கொரோனாவால் பாதிக்கப்பட்டுள்ளனர். மாவட்டம் முழுவதும் இதுவரை 1581 பேர் கொரோனாவால் பாதிக்கப்பட்டுள்ளனர். திருவள்ளூர் அரசு மருத்துவமனையில் மகப்பேறு மருத்துவமனை கட்டடத்தில் கொரோனா சிறப்பு வார்டு ஏற்படுத்தப்பட்டுள்ளது.
அதில் கொரோனாவால் பாதிக்கப்பட்டு 50 பேர் சிகிச்சை பெற்று வரும் நிலையில், மேல்மணம்பேடு பகுதியை சேர்ந்த 62 வயது நபரும் சிகிச்சைப்பெற்று வந்தார். இந்நிலையில் அங்கு 2-வது தளத்தில் கட்டட வேலைக்காக கட்டியுள்ள சாரத்தில் தூக்கிட்டு அவர் தற்கொலை செய்து கொண்டார். இது குறித்து திருவள்ளூர் நகர காவல் துறையினருக்கு தகவல் அளிக்கப்பட்டது. இதையடுத்து, சம்பவ இடத்திற்கு சென்ற போலீசார், இறந்தவரின் உடலை மீட்டு பிரேத பரிசோதனைக்காக மருத்துமனைக்கு அனுப்பி வைத்தனர்.