தமிழ்நாடு

கொரோனா தொற்று: மன உளைச்சலில் இருந்த ஐடி ஊழியர் எடுத்த விபரீத முடிவு

kaleelrahman

சென்னை கந்தன்சாவடியில் கொரோனா தொற்றால் பாதிக்கப்பட்ட நபர், மன உளைச்சலில் பக்கிங்காம் கால்வாயில் விழுந்து தற்கொலை செய்து கொண்டார்.

சென்னை கந்தன்சாவடி ஜீவானந்தம் தெருவில் உள்ள வாடகை வீட்டில் கர்நாடக மாநிலத்தை சேர்ந்த மிதுன் பொன்னப்பா (38) என்பவர் வசித்து வந்துள்ளார். கந்தன்சாவடி பகுதியில் உள்ள தனியார் ஐடி நிறுவனத்தில் மேலாளராக பணிபுரிந்து வந்த மிதுன் பொன்னப்பாவிற்கு கொரோனா தொற்று உறுதியானதால் அவரது வீட்டிலேயே தன்னை தனிமைபடுத்தி கொண்டு வீட்டிலிருந்தபடியே பணிபுரிந்து வந்துள்ளார்.

இந்நிலையில், தன்னைத் தானே தனிமை படுத்திக்கொண்டதால் ஏற்பட்ட மன உளைச்சலால் மிதுன், பக்கிங்காம் கால்வாயில் விழுந்து தற்கொலை செய்துகொண்டார். தகவல் அறிந்த நீலாங்கரை போலீசார் மற்றும் சென்னை மாநகராட்சி அதிகாரிகள் சம்பவ இடத்திற்கு வந்து மிதுன் உடலை மீட்டு, கொரோனா தொற்றால் தற்கொலை செய்து கொண்டதாக இறந்தவர் உடலை மாநகராட்சி அதிகாரிகள் எடுத்துச் சென்றனர்.

கவனத்துக்கு...

தற்கொலை என்பது எதற்கும் முடிவல்ல. மனித உயிரை மாய்த்துக்கொள்வதற்கான உரிமை யாருக்கும் இல்லை. தற்கொலை எண்ணம் மேலிடும் போது உரிய ஆலோசனை பெற்றால் புதிய வாழ்க்கை அவர்களுக்காக காத்துக்கொண்டிருக்கிறது. அதற்காகவே சினேகா போன்ற தன்னார்வ தொண்டு நிறுவனங்கள் சேவை ஆற்றி வருகின்றன. அவர்களை தொடர்பு கொண்டு இலவசமாக ஆலோசனை பெறலாம்.

சினேகா தன்னார்வ தொண்டு நிறுவனம்,
எண்; 11, பார்க் வியூவ் சாலை, ஆர்.ஏ.புரம்,
சென்னை - 600 028.
தொலைபேசி எண் - (+91 44 2464 0050, +91 44 2464 0060)