கொரோனா தொற்றால் பாதிக்கப்பட்டு ராஜீவ் காந்தி மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வரும் நபருடன் நெருங்கிய தொடர்பில் இருந்த 7 பேர் உள்பட பேருக்கு கொரோனா பாதிப்பு இல்லை என சுகாதாரத் துறை அமைச்சர் விஜயபாஸ்கர் தெரிவித்துள்ளார்.
உலகம் முழுவதும் கொரோனா வைரஸ் மிகப் பெரிய அச்சுறுத்தலாக மாறி வருகிறது. சீனாவில் பரவிய இந்த வைரஸ் படிப்படியாக அனைத்தும் நாடுகளுக்கும் பரவி வருகிறது. அந்த வகையில் இந்தியாவிலும் இந்த வைரஸ் பரவ தொடங்கியிருக்கிறது. டெல்லி, உத்தரப்பிரதேசம், கேரளா மற்றும் ஜம்முவில் கொரோனா வைரஸ் பாதிப்பு ஏற்பட்டிருப்பதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.
இதுவரை இந்தியாவில் 45 பேருக்கு கொரோனா தொற்று இருப்பது உறுதியாகியுள்ளதாகவும் 2,694 பேருக்கு கொரோனா தொற்று இல்லை என மருத்துவ அறிக்கை வந்துள்ளதாகவும் மத்திய அரசு தெரிவித்துள்ளது. இதனிடையே சில தினங்களுக்கு முன்னர் காஞ்சிபுரத்தை சேர்ந்த ஒருவருக்கு கொரோனா இருப்பதைக் கண்டறிந்த மருத்துவர்கள் அவருக்கு ராஜீவ்காந்தி மருத்துவமனையில் அமைக்கப்பட்டுள்ள தனிவார்டில் வைத்து சிகிச்சை அளித்து வருகின்றனர்.
இந்நிலையில் கொரோனா தொற்றால் பாதிக்கப்பட்டு ராஜீவ்காந்தி மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வரும் நபருடன் நெருங்கிய தொடர்பில் இருந்த 7 பேர் உட்பட மொத்தம் 8 பேருக்கு கொரோனா பாதிப்பு இல்லை என சுகாதாரத் துறை அமைச்சர் விஜயபாஸ்கர் தெரிவித்துள்ளார்.