தமிழ்நாடு

தமிழகத்தில் கொரோனா 2வது அலை கைமீறிவிட்டது : தமிழக அரசு

webteam

தமிழகத்தில் கொரோனா 2வது அலை கைமீறிச் சென்றுவிட்டதாக உயர்நீதிமன்றத்தில் தமிழக அரசு தகவல் தெரிவித்துள்ளது.

தலைமை நீதிபதி அமர்வு அரியர் வழக்கை விசாரித்து வந்தது. இதில் ஆஜராவதற்காக வந்த அரசு தலைமை வழக்கறிஞரிடம் தமிழகத்தில் கொரோனா 2வது அலை பரவி வருவதாகவும் இது அச்சத்தை ஏற்படுத்தியுள்ளது எனவும் நீதிபதிகள் தெரிவித்தனர். மேலும் தடுப்பூசி குறித்து வரும் செய்திகள் உண்மையா எனவும் கேள்வி எழுப்பினர்.

இதற்கு பதிலளித்த அரசு வழக்கறிஞர், “தற்போது தடுப்பூசிகள் போதிய அளவில் கையிருப்பில் உள்ளன. ஆனால் கொரோனா 2வது அலை கைமீறிச் சென்றுவிட்டது” எனத் தெரிவித்தார். நீதிமன்றங்களில் எந்த மாதிரியான தடுப்பு வழிமுறைகள் கடைபிடிக்க வேண்டும் எனவும் ஆலோசனைகளை வழங்க அரசு தயாரா எனவும் நீதிபதிகள் கேள்வி எழுப்பினர்.

இதுதொடர்பாக அரசு சுகாதாரத்துறை செயலாளர் விளக்கம் அளிப்பார் என வழக்கறிஞர் தெரிவித்தார். அதை ஏற்றுக்கொண்ட நீதிபதிகள் இன்றே சுகாதாரத்துறை செயலாளருடன் ஆலோசனை நடத்துவதாக நீதிபதிகள் அமர்வு தெரிவித்தது.