வளி மண்டல மேலடுக்கு சுழற்சி மற்றும் வெப்பச்சலனம் காரணமாக தமிழகத்தின் பல்வேறு மாவட்டங்களில் கனமழை பெய்தது.
திருவள்ளூர் மாவட்டத்தில் செங்குன்றம் மற்றும் அதன் சுற்று வட்டாரப் பகுதிகளில் பலத்த மழை பெய்தது. அதேபோல் தருமபுரி மாவட்டத்தில் நல்லம்பள்ளி, அரூர் மற்றும் அதன் சுற்று வட்டார பகுதிகளில் ஒருமணி நேரத்திற்கு மேலாக கனமழை பெய்தது. தருமபுரி நகரில் கழிவுநீர் கால்வாய் முழுவதும் நிரம்பி, மழை வெள்ளம் சாலையில் பெருக்கெடுத்து ஓடியது.
சேலம் மாவட்டம் ஆத்தூர் மற்றும் அதன் சுற்றுவட்டாரப் பகுதிகளில் பெய்த கனமழையால் பல்வேறு பகுதிகளில் மழை நீர் பெருக்கெடுத்தது. திருப்பத்தூர் மாவட்டம் வாணியம்பாடி மற்றும் அதன் சுற்றுவட்டாரப்பகுதிகளான ஜனதாபுரம், செட்டியப்பனுர், புதூர், கிரிசமுத்திரம்,வளையாம்பட்டு உள்ளிட்ட இடங்களில் கனமழை பெய்தது. இதனால் சாலை முழுவதும் குளம்போல் காட்சியளித்தது.