தமிழ்நாடு

பாஜக நடிகைகள் குறித்து சர்ச்சை பேச்சு: திமுக பேச்சாளருக்கு உயர் நீதிமன்றம் புதிய உத்தரவு

webteam

பாஜக-வைச் சேர்ந்த நடிகைகளை ஆபாசமாக விமர்சித்த வழக்கில், நடிகைகளிடம் மன்னிப்புக் கோரி பிரமாணப் பத்திரம் தாக்கல் செய்ய திமுக பேச்சாளருக்கு சென்னை உயர் நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.

சென்னை சைதாப்பேட்டையில் கடந்த அக்டோபர் மாதம் நடந்த திமுக பொதுக்கூட்டத்தில் பேசிய திமுக பேச்சாளர் சைதை சாதிக், பாஜகவைச் சேர்ந்த பிரபல நடிகைகள் குஷ்பு, நமீதா, காயத்ரி ரகுராம், கவுதமி ஆகியோர் குறித்து சர்ச்சைக்குரிய வகையில் ஆபாசமாக பேசியதாக போலீஸில் புகார் அளிக்கப்பட்டது.

அதன் அடிப்படையில் போலீஸார் பதிவு செய்த வழக்கில் முன்ஜாமீன் கோரி சைதை சாதிக் சென்னை உயர் நீதிமன்றத்தில் மனுத்தாக்கல் செய்திருந்தார்.

இந்த மனுவை விசாரித்த நீதிபதி ஜெகதீஷ் சந்திரா, பெண்கள் குறித்து மனுதாரர் அவதூறான கருத்துக்களை தெரிவித்து இருப்பதால், இனிமேல் இதுபோல் பேசமாட்டேன் என, அவர் அந்த நடிகைகளிடம் பகிரங்க மன்னிப்புக் கோரி பிரமாணப் பத்திரம் தாக்கல் செய்ய வேண்டும் என உத்தரவிட்டு, விசாரணையை நவம்பர் 29 ஆம் தேதிக்கு தள்ளி வைத்தார்.

அதுவரை சைதை சாதிக்கை கைது செய்யக் கூடாது என்றும் போலீசாருக்கு நீதிபதி அறிவுறுத்தியுள்ளார்.