தமிழ்நாடு

முதல்வர் குறித்து தொடர் அவதூறு - சாட்டை துரைமுருகனுக்கு வழங்கப்பட்ட ஜாமீன் ரத்து

ச. முத்துகிருஷ்ணன்

முதல்வர் குறித்து சமூக வலைத்தளங்களில் அவதூறாக பேசிய வழக்கில் யூடியூபர் சாட்டை துரைமுருகனுக்கு வழங்கப்பட்ட ஜாமீனை ரத்து செய்து உயர்நீதிமன்ற மதுரைக்கிளை உத்தரவிட்டுள்ளது.

சமூக வலைத்தளங்களில் முதல்வர் குறித்து மீண்டும் அவதூறாக பேசியதால் ஜாமீனை ரத்து செய்ய வேண்டும் என அரசு தரப்பில் மனு தாக்கல் செய்யப்பட்டிருந்தது. வழக்கை விசாரித்த நீதிபதி புகழேந்தி, சாட்டை துரைமுருகனுக்கு வழங்கப்பட்ட ஜாமீன் ரத்து செய்யப்படுவதாக உத்தரவிட்டார்.

மேலும் ஒப்பந்த விதிகளை மீறி வீடியோக்கள் பதிவேற்றம் செய்யப்பட்டால், சம்பந்தப்பட்ட சமூக வலைதள நிர்வாகம் குறிப்பிட்ட வீடியோக்களை நீக்கவும், தேவைப்பட்டால் சேனலை முடக்கவும் நடவடிக்கை எடுக்க வேண்டும் என நீதிபதி தெரிவித்தார்.

சம்பந்தப்பட்ட சமூக வலைதள நிறுவனம் நடவடிக்கை எடுக்க தவறினால், அவர்களும் குற்றவாளிகளே எனக்கூறிய நீதிபதி, நடவடிக்கை எடுக்கத் தவறும் சமூக வலைதளங்கள் மீதும், காவல்துறையினர் உரிய நடவடிக்கை எடுக்கலாம் என்றும், வீடியோக்களை காவல்துறையினரே அகற்றலாம் என்றும் தெரிவித்தார்.