தமிழ்நாடு

தொடர் மழை: பவானிசாகர் அணையின் நீர்மட்டம் 102 அடியாக உயர்வு

kaleelrahman

தொடர் மழை காரணமாக பவானிசாகர் அணையின் நீர்மட்டம், இந்த ஆண்டில் இரண்டாவது முறையாக 102 அடியை எட்டியுள்ளது. பவானி சாகர் அணைக்கு வரும் உபரிநீர், அப்படியே வெளியேற்றப்படுவதால், பவானி ஆற்றில் வெள்ளப் பெருக்கு ஏற்பட்டுள்ளது.

105 அடி கொள்ளளவு கொண்ட பவானிசாகர் அணையில், பொதுப்பணித் துறை விதிப்படி அக்டோபர் மாதத்தில் 102 அடிக்கு மேல் நீர் தேக்கி வைக்கப்படாது. தற்போது பெய்துவரும் தொடர் மழையால் அணையின் நீர்மட்டம் 102 அடியை எட்டியது. இதனால் அணைக்கு வரும் 4 ஆயிரத்து 600 கனஅடி நீர் அப்படியே, பவானி ஆறு மற்றும் கீழ்பவானி வாய்க்காலில் திறந்துவிடப்படுகிறது.

இதனால் பவானிஆற்றில் வெள்ளம் கரைபுரண்டு ஓடிகிறது. தாழ்வான பகுதியில் இருப்போர் பாதுகாப்பான இடங்களுக்குச் செல்லுமாறு ஒலி பெருக்கி மூலம் அறிவுறுத்தப்பட்டது. பவானிஆற்றில் திறந்துவிடப்படும் உபரிநீர், பவானிசாகர், சத்தியமங்கலம், பெரிய கொடிவேரி, வழியாக பவானிகூடுதுறை சென்றடைந்து காவிரி ஆற்றில் கலப்பதால் டெல்டா பாசன விவசாயிகள் மகிழ்ச்சி அடைந்துள்ளனர்.