திம்பம் மலைப்பாதையில் ஏற்பட்ட மண்சரிவு. 2 இடங்களில் மரங்கள் சாய்ந்து விழுந்ததால் 3 மணி நேரம் போக்குவரத்து பாதிக்கப்பட்டது.
தமிழகம், கர்நாடகத்தை இணைக்கும் முக்கிய வழித்தடமாக திம்பம் மலைப்பாதை உள்ளது. 27 கொண்டை ஊசி வளைவுகள் கொண்ட இந்த பாதையில் 24 மணி நேரமும் வாகனங்கள் பயணிக்கின்றன. இந்நிலையில் ஆசனூர் மலைப்பகுதியில் பெய்த பலத்த மழை காரணமாக திம்பம் சாலையில் உள்ள அருவிகளில் வெள்ளம் ஆர்ப்பரித்து கொட்டியது.
தொடர் மழையால் திம்பம் 27 வளைவு அருகே 2 இடங்களில் மண் சரிவு ஏற்பட்டு அங்கிருந்த மரமும் வேரோடு சாய்ந்து சாலையில் விழுந்தது. இதனால் இரு மாநிலங்களிடையே போக்குவரத்து பாதிக்கப்பட்டது. இதனால் கர்நாடகத்தில் இருந்து வந்த வாகனங்கள் ஆசனூரிலும், தமிழகத்தில் இருந்து வந்த வாகனங்கள் பண்ணாரி சோதனைச்சாவடியிலும் நிறுத்தப்பட்டன.
இதையடுத்து 3 மணி நேரத்துக்கு பின் பொதுப்பணித் துறையினர் சாலையில் கிடந்த மண்சரிவை அப்புறப்படுத்தியதை அடுத்து பேருந்துகள் மற்றும் சிறிய இலகுரக வாகனங்கள் அனுமதிக்கப்பட்டன. ஜேசிபி மூலம் மரங்களை அப்புறப்படுத்தும் பணி தொடர்ந்து நடைபெற்று வருகிறது. திம்பம் பாதையில் பனிப்பொழிவு காரணமாக வாகனங்கள் மெதுவாக ஊர்ந்து செல்கின்றன.