தொகுதி மறுவரையறை முகநூல்
தமிழ்நாடு

’தென் மாநிலங்களுக்கான பிரதிநிதித்துவம் வெகுவாகக் குறையும் ஆபத்து’ ... விஜய் வெளியிட்ட அறிக்கை!

இந்த இரு கோட்பாடுகளையும் முடிந்தவரையில் ஒன்று மற்றொன்றை அதிகம் பாதிக்காத வகையில் நடைமுறைப்படுத்த முயல வேண்டும். - தவெக விஜய்

ஜெனிட்டா ரோஸ்லின்

மத்திய அரசின் நாடாளுமன்ற தொகுதி மறுவரையறையால் தமிழ்நாட்டுக்கு ஏற்பட உள்ள பாதிப்புகள் குறித்து விவாதிக்க முதல்வர் ஸ்டாலின் தலைமையில் இன்று காலை 10 மணியளவில் சென்னை தலைமை செயலகத்தில் அனைத்துக் கட்சி கூட்டத்தில் பேசியுள்ளார்.

Headlines

இந்தக் கூட்டத்தில், திமுக தோழமைக் கட்சிகள், அதிமுக, பாமக, தேமுதிக, தவெக, ஐஜேகே உள்ளிட்ட 56 கட்சிகள் பங்கேற்றுள்ளன. பின்னர், அனைத்துக் கட்சி எம்.எல்.ஏக்கள் குழு குடியரசுத் தலைவரைச் சந்தித்து தீர்மானத்தை நேரில் வழங்கத் திட்டமிட்டுள்ளன.

இந்நிலையில், மறுசீரமைப்பு குறித்து #SayNoToDelimitation என்ற ஹேஷ்டாக்கை பயன்படுத்தி , 4 பக்க அறிக்கையை வெளியிட்டுள்ளார் தவெக தலைவர் விஜய்.

அதில், “ நம் அரசியல் சாசனத்தின் 84ஆவது சட்டத் திருத்தத்தின்படி நாடாளுமன்றத் தொகுதிகளின் மறுசீரமைப்பு 2026ஆம் ஆண்டு வரை நிறுத்தி வைக்கப்பட்டுள்ளது. எனவே, வரும் ஆண்டிற்கு பிறகு இந்த மறுசீரமைப்புப் பணி, ஒன்றிய அரசால் தொடங்கப்பட வாய்ப்புள்ளது. எவ்வகையில் இந்த மறுசீரமைப்பு நடைபெறும் என்பது பற்றி எந்த ஒரு தெளிவான விளக்கமோ வாக்குறுதியோ மாநிலங்களுக்கு இதுவரை வழங்கப்படவில்லை.

தற்போதைய நாடாளுமன்றத் தொகுதிகளின் எண்ணிக்கையை மாற்றாமலோ அல்லது இன்னொரு அரசியல் சட்டத் திருத்தத்தின் மூலம் நாடாளுமன்றத் தொகுதிகளின் எண்ணிக்கையை உயர்த்தியோ இந்த மறுசீரமைப்பு நடைபெறலாம். எந்த முறையைப் பின்பற்றினாலும் அதில் "மாநிலங்களின் மக்கள் தொகை" என்பது ஒற்றை அளவுகோலாக இல்லாவிடினும் முக்கிய அளவுகோலாக இருக்கும் என்பது பட்டவர்த்தனமான உண்மை.

நம் அரசியல் சாசன 81ஆவது சட்டப் பிரிவு, நாட்டிலுள்ள ஒவ்வொரு மக்களவை உறுப்பினரும் கூடுமானவரையில் "சம-எண்ணிக்கையிலான மக்களுக்குப் பிரதிநிதியாக இருக்க வேண்டும்" என்று கூறுகிறது (equal population representation for each MP). இதற்கு அடிப்படையான "One vote-one value" என்பது ஒரு ஜனநாயகக் கோட்பாடு. ஆனால் அதே சமயம் இந்தியா போன்ற பன்முகத்தன்மை கொண்ட கூட்டாட்சி நாட்டில், ஒவ்வொரு மாநிலத்திற்கும் சமமான பிரதிநிதித்துவம் இருக்க வேண்டும் என்பதும் ஒரு முக்கியமான ஜனநாயகக் கோட்பாடாகும். இந்த இரு கோட்பாடுகளையும் முடிந்தவரையில் ஒன்று மற்றொன்றை அதிகம் பாதிக்காத வகையில் நடைமுறைப்படுத்த முயல வேண்டும்.

புதிதாக மக்கள் தொகைக் கணக்கெடுப்பு நடத்தப்பட்டு, அதன் அடிப்படையில் மட்டுமோ அல்லது புதிய மக்கள் தொகையை ஒரு முக்கிய அளவுகோலாகக் கொண்டோ நிகழ்த்தப்படும் நாடாளுமன்றத் தொகுதி மறுசீரமைப்பில் தென் மாநிலங்களுக்கான பிரதிநிதித்துவம் வெகுவாகக் குறையும் ஆபத்து உள்ளது. ” போன்று பல விஷயங்களை தெரிவித்துள்ளார்.

முழு அறிக்கையை கீழே இணைக்கப்பட்டுள்ள புகைப்படத்தில் காணலாம்.