திண்டுக்கல் பேரூராட்சி மன்ற கூட்டத்தில் தீர்மான நகலை கிழித்தெறிந்த காங்கிரஸ் உறுப்பினர் web
தமிழ்நாடு

திண்டுக்கல்| தீர்மான நகலை கிழித்தெறிந்த காங்கிரஸ் உறுப்பினர்.. என்ன நடந்தது?

திண்டுக்கல் சித்தையன்கோட்டை பேரூராட்சி மன்ற கூட்டத்தில், தனது வார்டுக்கு எந்த திட்டப்பணிகளும் செய்யவில்லை எனக் கூறி, காங்கிரஸ் உறுப்பினர் தீர்மான நகலை கிழித்தெறிந்ததால் பரபரப்பான சூழல் ஏற்பட்டது.

PT WEB

திண்டுக்கல் மாவட்டம் சித்தையன்கோட்டை பேரூராட்சியில், காங்கிரஸ் உறுப்பினர் பழனியாண்டவர், வார்டு புறக்கணிப்பு மற்றும் நிதி முறைகேடு குற்றச்சாட்டுகளை முன்வைத்து தீர்மான நகலை கிழித்தெறிந்த சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியது. இதனால் கூட்டத்தில் பதற்றம் நிலவியது, மற்ற உறுப்பினர்கள் அவரை சமாதானப்படுத்த முயன்றனர்.

திண்டுக்கல் மாவட்டம் ஆத்தூர் சட்டமன்றத் தொகுதிக்கு உட்பட்ட சித்தையன்கோட்டை பேரூராட்சி மன்றக் கூட்டத்தில், வார்டு புறக்கணிப்பு மற்றும் நிதி முறைகேடு புகார்களை முன்வைத்து காங்கிரஸ் உறுப்பினர் தீர்மான நகலைக் கிழித்தெறிந்த சம்பவம் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

ஊரக வளர்ச்சித் துறை அமைச்சர் ஐ. பெரியசாமியின் சொந்தத் தொகுதியான ஆத்தூரில் உள்ள சித்தையன்கோட்டை பேரூராட்சியில் மொத்தம் 18 வார்டுகள் உள்ளன. இதில் திமுகவைச் சேர்ந்த பதினைந்து உறுப்பினர்கள், இரண்டு காங்கிரஸ் உறுப்பினர்கள், ஒரு அதிமுக உறுப்பினர் மற்றும் ஒரு மாற்றுத்திறனாளி உறுப்பினர் என மொத்தம் பத்தொன்பது உறுப்பினர்கள் உள்ளனர்.

இந்நிலையில், திங்கள்கிழமை மாலை பேரூராட்சித் தலைவர் போதும்பொண்ணு தலைமையில், துணைத்தலைவர் ஜாகிர் உசேன் முன்னிலையில் சாதாரண வாராந்திரக் கூட்டம் நடைபெற்றது. செயல் அலுவலர் ஜெயமாலு கூட்டத்திற்கு அனைவரையும் வரவேற்றுப் பேசினார்.

தீர்மான நகலை கிழித்தெறிந்த காங்கிரஸ் உறுப்பினர்..

கூட்டம் தொடங்கிய சிறிது நேரத்திலேயே, 14-வது வார்டு காங்கிரஸ் உறுப்பினர் பழனியாண்டவர் எழுந்து தனது வார்டு பகுதியில் நிலவும் அடிப்படைப் பிரச்சினைகள் குறித்து ஆவேசமாகப் பேசினார். கடந்த நான்கு ஆண்டுகளாகத் தனது வார்டுக்கு உட்பட்ட பகுதிகளுக்கு எந்தவிதமான புதிய திட்டப்பணிகளும் நிறைவேற்றப்படவில்லை என்றும், இது குறித்துப் பலமுறை புகார் அளித்தும் பேரூராட்சி நிர்வாகம் எவ்வித நடவடிக்கையும் எடுக்கவில்லை என்றும் அவர் குற்றம் சாட்டினார்.

வாக்குவாதம் முற்றிய நிலையில், தனது எதிர்ப்பைப் பதிவு செய்யும் விதமாக தமக்கு வழங்கப்பட்ட தீர்மான நகலை அனைத்து உறுப்பினர்கள் முன்னிலையிலும் பழனியாண்டவர் கிழித்தெறிந்து, பேரூராட்சித் தலைவர் மற்றும் செயல் அலுவலரிடம் கடும் வாக்குவாதத்தில் ஈடுபட்டார். இவருக்கு ஆதரவாக திமுகவைச் சேர்ந்த மற்றொரு உறுப்பினரும் தனது வார்டு பகுதிக்கு எவ்விதப் பணிகளும் செய்யப்படவில்லை எனச் செயல் அலுவலர் ஜெயமாலுவிடம் முறையிட்டது அங்கிருந்தவர்களிடையே சலசலப்பை ஏற்படுத்தியது.

மேலும் இக்கூட்டத்தில் பேசிய காங்கிரஸ் உறுப்பினர் பழனியாண்டவர், ஒவ்வொரு மாதமும் மன்ற உறுப்பினர்களுக்கு வழங்கப்பட வேண்டிய 2,500 ரூபாய் அமர்வுப் படி தமக்கு வழங்கப்படுவதில்லை என்றும், ஆனால் தீர்மானப் புத்தகத்தில் உறுப்பினர்களுக்குப் பணம் வழங்கிவிட்டதாக முறைகேடாக எழுதி வைக்கப்பட்டுள்ளதாகவும் பகீர் புகாரை முன்வைத்தார். காங்கிரஸ் உறுப்பினரின் இந்த அதிரடிப் பேச்சால் கூட்டத்தில் பதற்றம் நிலவிய சூழலில், மற்ற உறுப்பினர்கள் அவரைச் சமாதானப்படுத்தினர்.

கூட்டணிக் கட்சியினரே அமைச்சர் தொகுதியில் இத்தகைய குற்றச்சாட்டுகளை முன்வைத்துள்ளது அரசியல் வட்டாரத்தில் விவாதப் பொருளாகியுள்ளது.