காங்கிரஸ் கட்சியின் தலைவர்களை கொச்சைப்படுத்தி பேசி வரும் சீமான் மீது நடவடிக்கை எடுக்கக் கோரி தமிழ்நாடு காங்கிரஸ் சார்பில் டிஜிபியிடம் புகார் அளிக்கப்பட்டுள்ளது.
காங்கிரஸ் சட்டமன்றக் குழுத் தலைவர் செல்வப்பெருந்தகை, காங்கிரஸ் நாடாளுமன்ற உறுப்பினர் ஜோதிமணி ஆகியோர் டிஜிபி சைலேந்திர பாபுவை சந்தித்து புகார் மனுவை அளித்தனர். பின்னர் செய்தியாளர்களிடம் பேசிய ஜோதிமணி, இளைஞர்களை நல்வழிப்படுத்தும் வகையில் அரசியல் இருக்க வேண்டும், ஆனால் சீமான் பயங்கரவாதத்தை ஆதரிப்பது போல் பேசி வருகிறார் எனக் குறிப்பிட்டார்.
தமிழகத்தில் வன்முறையைத் தூண்டும் வகையில் பேசி வரும் சீமான் மீது சட்டவிரோத நடவடிக்கை தடுப்புச் சட்டத்தின் கீழ் நடவடிக்கை எடுக்க வேண்டும் என புகார் அளித்துள்ளதாகவும் ஜோதிமணி தெரிவித்தார். இறந்து போன தலைவர்களை கொச்சைப்படுத்துவது சரியானதல்ல என தெரிவித்த காங்கிரஸ் சட்டமன்றக் குழுத் தலைவர் செல்வப்பெருந்தகை, சீமான் இத்தகைய அவதூறு பேச்சுகளை நிறுத்திக் கொள்ள வேண்டும் என்றும் குறிப்பிட்டார்.