தமிழ்நாடு

ரயிலில் தவறவிட்ட 18 பவுன் நகை: பயணியிடம் பத்திரமாக ஒப்படைத்த ரயில்வே காவல் துறை!

ரயிலில் தவறவிட்ட 18 பவுன் நகை: பயணியிடம் பத்திரமாக ஒப்படைத்த ரயில்வே காவல் துறை!

kaleelrahman

விருதுநகர் மாவட்டம் ஸ்ரீவில்லிபுத்தூரில் தவறவிட்ட 18 பவுன் நகையை பயணியிடம் ஒப்படைத்த ரயில்வே காவல்துறையினருக்கு பாராட்டுகள் குவிந்து வருகின்றன. 

சிவகாசியை சேர்ந்த ஜீவானந்தம் (64) என்பவர் தனது குடும்பத்தினர் 5 பேருடன் நேற்று இரவு கொச்சி எக்ஸ்பிரஸ் ரயிலில் சென்னையில் இருந்து சிவகாசிக்கு பயணம் செய்துள்ளார். சிவகாசியில் இறங்கும்போது தான் கொண்டுவந்த டிராவல் பேக்கை மறந்து விட்டு சென்றுள்ளார். வண்டி கிளம்பிய பின் தான் அவருக்கு நினைவு வந்துள்ளது.  உடனே ரயில்வே அதிகாரிகளிடம் தகவல் தெரிவித்து பின்னர் ஸ்ரீவில்லிபுத்தூர் ரயில்வே காவல் துறைக்கு தகவல் தெரிவிக்கப்பட்டது.

இதையடுத்து உடனடியாக ரயில்வே காவல் துறையினர் அவர்கள் பயணித்த பெட்டியில் சோதனை செய்ததில் டிராவல் பேக் இருந்தது தெரியவந்தது. உடனடியாக பேக்கை சோதனை செய்ததில் அதில் 18 பவுன் நகை இருப்பதும் கண்டறியப்பட்டது. 

இதைத் தொடர்ந்து ஸ்ரீவில்லிபுத்தூர் ரயில் நிலையத்திற்கு வந்த ஜீவானந்தம், உரிய ஆவணம் ஒப்படைத்த பின்னர் அவர் தவறவிட்ட 18 பவுன் நகைகளை ரயில்வே காவல்துறையினர் அவரிடம் ஒப்படைத்தனர். தவறவிட்ட பொருட்களை உடனடியாக கைப்பற்றி உரியவரிடம் ஒப்படைத்த ரயில்வே காவல்துறைக்கு பாராட்டுகள் குவிந்து வருகின்றன.