தமிழ்நாடு

திருவாரூர்: வெட்டப்பட்ட பனை மரங்கள்.. தடுத்து நிறுத்திய பொதுமக்கள் - விசாரணையில் திருப்பம்

webteam

திருவாரூர் மாவட்டத்தில் விளமல் அருகே நெடுஞ்சாலைத்துறையின் ஒப்பந்தத்தின்படி ஒப்பந்தக்காரரொருவர், பனைமரங்களை வெட்டியுள்ளார். ஆனால், யாரோ ஒருவர் திடீரென வந்து மரத்தை வெட்டுகிறார் என மக்கள் புகாரளித்துள்ளனர். இதனால் காவல்துறையினர் அப்பகுதியில் குவிக்கப்பட்டு அப்பகுதியில் சில மணி நேரங்களுக்கு பரபரப்பு சூழ்ந்தது. பின் இது அரசு நடவடிக்கை என தெரிந்தப்பிறகு அங்கிருந்து மக்கள் கலைந்து சென்றனர்.

திருவாரூர் மாவட்டத்தில் மன்னார்குடி செல்லும் வழி நெடுகிலும் பனைமரங்கள் சூழ்ந்து இருக்கும். இந்நிலையில், விளமல் அருகே பட்டுப்போன பனைமரங்களை சிலர் வெட்டிக் கொண்டிருந்துள்ளார்கள். அப்போது, அந்த வழியாக வந்த பொதுமக்களில் ஒருவர் அந்த ஊர் கிராம நிர்வாக அலுவலரிடம் பனை மரங்கள் வெட்டப்படுவதாக புகார் தெரிவித்துள்ளார். அந்த கிராம நிர்வாக அலுவலர், வட்டாட்சியர் தனசேகரனிடம் தகவலை தெரியப்படுத்தியுள்ளார். பின்னர் வட்டாட்சியர் தனசேகரன், திருவாரூர் தாலுகா காவல் நிலையத்தில் புகார் அளித்தார். விஷயம் அறிந்த காவல் உதவி ஆய்வாளர் காமாட்சி உடனடியாக சம்பவ இடத்துக்கு சென்று பனை மரத்தை வெட்டியவர்கள் இடம் விசாரணை நடத்தினார்கள். அப்போதுதான் ஒரு உண்மை தெரிந்தது.

தமிழக அரசு வடகிழக்கு பருவமழையை எதிர்கொள்ளும் வகையில் சாலைகளில் மக்களுக்கு ஆபத்தான நிலையில் உள்ள பட்டுப்போன மரங்களை வெட்ட சொல்லி நெடுஞ்சாலைத்துறைக்கு சுற்றறிக்கை அனுப்பியுள்ளது. அதன்படி நெடுஞ்சாலைத்துறை பட்டுப்போன மரங்களை டெண்டர் விட்டு பட்டுப்போன மரங்களுக்கு பதிலாக புதிய மரக்கன்றுகளை அந்த இடத்தில் நட்டு அந்த மரங்களை அகற்ற டெண்டர் விட்டுள்ளது.

டெண்டர் எடுத்தவர்கள் இன்று காலை அந்த பட்டுப்போன மரங்களை வெட்டி அப்புறப்படுத்தி இருந்தார்கள். அப்போதுதான் பொதுமக்களில் ஒருவர் பனை மரங்களை மாவட்ட ஆட்சியர் அனுமதி இன்றி வெட்டக் கூடாது என்று அரசு உத்தரவு பிறப்பித்துள்ளது என்றார். அத்துடன் டெண்டர் விஷயம்தெரியாமல் மக்களில் ஒருவர் பனைமரம் நாட்டின் வளர்ச்சிக்கான மரம் என எண்ணி, பனை மரங்கள் வெட்டப்படுவதாக கொடுத்த புகாரின் அடிப்படையில் இத்தனை குழப்பங்கள் அரங்கேறியுள்ளது.