தமிழ்நாடு

ஆளுநரை அவதூறாக பேசிய திமுக பேச்சாளர் மீது காவல் ஆணையரிடம் புகார்!

webteam

ஆளுநரை பற்றி அவதூறாக பேசியதாக திமுக பேச்சாளர் மீது நடவடிக்கை எடுக்க வலியுறுத்தி, ஆளுநர் மாளிகை துணை செயலாளர், சென்னை காவல்துறை ஆணையரிடம் புகார் அளித்துள்ளார்.

ஆளுநர் குறித்து அவதூறாகவும், மிரட்டல் விடும் வகையில் பேசியதாக திமுக பேச்சாளர் சிவாஜி கிருஷ்ணமூர்த்தி மீது நடவடிக்கை எடுக்க வலியுறுத்தி ஆளுநர் மாளிகை சார்பில், ஆளுநர் மாளிகை துணை செயலாளர் பிரசன்னா ராமசாமி சார்பில் காவல் ஆணையரிடத்தில் புகார் அளிக்கப்பட்டுள்ளது.

விருகம்பாக்கத்தில் நடந்த பேராசிரியர் அன்பழகன் நூற்றாண்டு விழாவில் தலைமை கழக பேச்சாளர் சிவாஜி கிருஷ்ணமூர்த்தி என்பவர் ஆளுநரை பற்றி அவதூறாகவும், மிரட்டல் விடும் தொனியில் பேசியுள்ளார். எனவே இந்திய தண்டனைச் சட்டம் பிரிவு 124ன் படி குடியரசு தலைவரையோ, ஒரு மாநிலத்தின் ஆளுநரையோ, அவரது பணியை செய்ய விடாமல் தடுக்கும் வகையில் செயல்படுதல் என்கிற பிரிவின் கீழ் வழக்கு பதிவு செய்ய வேண்டும் என புகார் மனுவில் குறிப்பிடப்பட்டுள்ளது.

சென்னை காவல்துறை ஆணையர் சங்கர் ஜிவால் அவர்களுக்கு தபால் மூலமாகவும் ஆன்லைன் மூலமாகவும் புகார் அளிக்கப்பட்டுள்ளது குறிப்பிடத்தக்கது.

திமுக பேச்சாளர் சிவாஜி கிருஷ்ணமூர்த்தி பேசிய அந்த நிகழ்ச்சியில் அமைச்சர் மா.சுப்பிரமணியன், தென்சென்னை எம்பி தமிழச்சி தங்க பாண்டியன், எம்.எல்.ஏ பிரபாகர் ராஜா ஆகியோர் கலந்து கொண்டனர்.