ஈரோடு அரசு தலைமை மருத்துவமனையில் மருத்துவர்களின் அலட்சியத்தால் பிரசவத்தின் போது குழந்தை உயிரிழந்ததாக புகார் தெரிவித்து உறவினர்கள் வருவாய் கோட்டாட்சியரிடம் வாக்குவாதத்தில் ஈடுபட்டதால் சிறிது நேரம் பரபரப்பு ஏற்பட்டது.
ஈரோடு சம்பத் நகர் பகுதியில் கணேசன் - ரமணி தம்பதியினர் வசித்து வருகிறார்கள். தனியார் தொலைத்தொடர்பு நிறுவனத்தில் பணியாற்றி வரும் கணேசன், தனது மனைவியை பிரசவத்திற்காக கடந்த சனிக்கிழமை ஈரோடு அரசு தலைமை மருத்துவமனையில் அனுமதித்தார். இதைத் தொடர்ந்து ஜூலை 30ம் தேதி சுகப்பிரசவம் ஆக இருந்த நிலையில், இன்று காலை ரமணியின் பனிக்குடம் நீரின் அளவு குறைந்து இருந்ததோடு குழந்தையின் இதயத்துடிப்பும் குறைந்து வருவதால் உடனடியாக அறுவை சிகிச்சை செய்து குழந்தையை வெளியே எடுக்க மருத்துவர்கள் முடிவு செய்தனர்.
இந்நிலையில் குழந்தை இறந்து பிறந்தாக உறவினர்களிடையே மருத்துவர்கள் தெரிவித்துள்ளனர். இதனையடுத்து கணேசன் மற்றும் உறவினர்கள் மருத்துவர்களின் அலட்சியத்தால் தான் குழந்தை இறந்ததாக அரசு மருத்துவமனை காவல் நிலையத்தில் புகார் தெரிவித்தனர். இதையடுத்து சம்பவ இடத்திற்கு வந்த வருவாய் கோட்டாட்சியர் பிரேமலதா மற்றும் தாசில்தார் ஆகியோரிடம் வாக்குவாதத்தில் ஈடுபட்டனர்.
பின்னர் பேச்சுவார்த்தையில் ஈடுபட்ட கோட்டாட்சியர் பிரேமலதா, குழந்தையை உடற்கூறாய்விற்காக பெருந்துறையில் உள்ள ஈரோடு அரசு மருத்துவக்கல்லூரி மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டு மருத்துவ அறிக்கை பெற்ற பின்னர் விசாரணை மேற்கொண்டு உரிய நடவடிக்கை எடுக்கப்படும் என தெரிவித்ததை அடுத்து கணேசன் மற்றும் உறவினர்கள் கலைந்து சென்றனர்.