டெங்கு காய்ச்சலால் ஏற்பட்ட உயிரிழப்புகள் குறித்த உண்மை விவரத்தை பொது சுகாதாரத்துறை வெளியிட மறுப்பதாக புகார் எழுந்துள்ளது.
சேலம் மாவட்டம் எடப்பாடியை அடுத்த தேவூர் பகுதியை சேர்ந்தவர் செல்வம். இவர் டெங்கு காய்ச்சலால் ஏற்பட்ட உயிரிழப்புகள் தொடர்பான தகவல்களை, தகவல் அறியும் உரிமைச்சட்டத்தின் கீழ் பொது சுகாதாரத்துறையில் விவரம் கேட்டிருந்தார். அதில் கடந்த ஜனவரி முதல் செப்டம்பர் வரையில் டெங்கு காய்ச்சலால் அரசு மருத்துவமனையில் 23 பேரும், தனியார் மருத்துவமனைகளில் 11 பேரும் உயிரிழந்துள்ளாதாக தெரிவிக்கப்பட்டுள்ளது. ஆனால், உண்மைத்தன்மை மறைக்கப்படுவதாக சமூக ஆர்வலர்கள் குற்றம்சாட்டுகின்றனர்.
இதுகுறித்து கூறும் மனுதாரர் செல்வம், டெங்கு உயிரிழப்புகளின் உண்மை எண்ணிக்கை குறித்து நியாயமான பதில் வழங்கவேண்டும் என்று கூறியுள்ளார். அத்துடன் டெங்குவால் உயிரிழந்தவர்களின் குடும்பங்களுக்கு உரிய நிவாரணம் வழங்கவேண்டும் என்றும் அவர் கேட்டுக்கொண்டுள்ளார். கடந்த சில மாதங்களில் மட்டும் தமிழகத்தில் நூற்றுக்கணக்கானோர் டெங்குக் காய்ச்சலால் உயிரிழந்திருப்பது குறிப்பிடத்தக்கது.