காஞ்சிபுரம் சிறுதாவூரில், ஓய்வுபெற்ற விமானப்படை வீரரின், நான்கு கோடி ரூபாய் மதிப்பிலான நிலத்தை, சசிகலா மற்றும் அவரின் குடும்பத்தினர் பறித்ததாக கொடுக்கப்பட்ட புகார் குறித்து காஞ்சிபுரம் நில அபகரிப்பு தடுப்பு துணை கண்காணிப்பளார் நேற்று விசாரணை நடத்தினார்.
காஞ்சிபுரம் மாவட்டம், கூடுவாஞ்சேரியைச் சேர்ந்தவர் கண்ணன், ஓய்வுபெற்ற விமானப்படை வீரர். இவர் மனைவி மற்றும் உறவினர்களுக்கு, திருப்போரூர் அருகே உள்ள சிறுதாவூரில், நான்கு கோடி ரூபாய் மதிப்பிலான, 16.44 கிரவுண்ட் நிலம் இருந்தது. 1997 முதல், 2003ம் ஆண்டு வரை, இந்த நிலங்களை, அ.தி.மு.க., பொதுச்செயலர் சசிகலா மற்றும் அவரது குடும்பத்தினர் பறித்துள்ளனர்.
இது தொடர்பாக, முன்னாள் விமானப்படை வீரரான கண்ணன், 12 ஆண்டுகளுக்கு முன், காஞ்சிபுரம் மாவட்ட காவல் கண்காணிப்பாளர் அலுவலகத்தில் புகார் அளித்திருந்தார். ஆனால், அந்த புகாரின் படி, நில அபகரிப்பு தடுப்பு பிரிவு போலீசார் எந்த நடவடிக்கையும் எடுக்கவில்லை. இந்நிலையில், அறப்போர் இயக்கத்தினர் என்ற தொண்டு நிறுவனத்தினர், சசிகலா மற்றும் குடும்பத்தினர், சிறுதாவூரில், 30 ஏக்கர் நிலத்தை முறைகேடாக பறித்து வைத்துள்ளதாகவும், அதில், அரசு புறம்போக்கு நிலம், குளங்கள், முன்னாள் படை வீரரான கண்ணனின் நிலம் போன்றவை அடங்கியிருப்பதாக, கடந்த மாதம், டி.ஜி.பி., அலுவலகத்தில் புகார் அளித்தனர்.
இந்தப் புகார், டி.ஜி.பி., அலுவலகத்திலிருந்து, காஞ்சிபுரம் நில அபகரிப்பு தடுப்பு பிரிவிற்கு மாற்றப்பட்டது. புகார் அளித்த அறப்போர் இயக்கத்தின் ஒருங்கிணைப்பாளர் ஜெயராம் வெங்கடேசன் மற்றும் கண்ணன் ஆகியோர், காஞ்சிபுரம் மாவட்ட காவல் கண்காணிப்பாளர் அலுவலகத்தில் உள்ள, நில அபகரிப்பு தடுப்பு பிரிவில் விசாரணைக்கு ஆஜராகினர். புகார் குறித்து, நில அபகரிப்பு தடுப்பு துணை கண்கானிப்பளார் சக்கிரவர்தி தலைமையில் இரண்டு மணி நேரத்திற்கும் மேலாக விசாரணை நடந்தது.