மதுரை அரசு மருத்துவமனையில் பிரசவ வார்டில் குழந்தையை மாற்றி விட்டதாக தாய் காவல் நிலையத்தில் புகார் அளித்துள்ளார்.
மதுரை பள்ளப்பட்டியைச் சேர்ந்தவர் பாண்டியன். இவர் அரசு மதுபானக்கடையில் விற்பனையாளராக பணியாற்றி வருகிறார். இவரது மனைவி ராணியை கடந்த 25 ஆம் தேதி மதுரை அரசு மருத்துவமனையில் பிரசவத்திற்காக அனுமதித்தனர். ராணிக்கு அறுவைச்சிகிச்சை மூலம் ஆண் குழந்தை பிறந்தாக மருத்துவமனையில் தெரிவித்துள்ளனர். இதனை தொடர்ந்து அரை மணி நேரத்திற்கு பின்னர் ஊழியர்கள் வந்து ராணிக்கு பெண் குழந்தை பிறந்ததாகவும் முன்பு தவறுதலாக கூறி விட்டதாகவும் தெரிவித்துள்ளனர். இதனையடுத்து ராணியின் உறவினர்கள் மருத்துவமனை ஊழியர்களுடன் வாக்குவாதத்தில் ஈடுபட்டார். ஊழியர்களின் மிரட்டலால் மருத்துவமனையில் பெண் குழந்தையுடன் சிகிச்சை பெற்று வந்துள்ளார்.
இந்நிலையில் மருத்துவமனையில் சிகிச்சை முடிந்து வீடு திரும்பிய ராணி அரசு மருத்துவமனை புற காவல்நிலையத்தில் புகார் மனு அளித்தனர். அந்த புகார் மனுவில், தனக்கு ஆண் குழந்தை பிறந்ததாகவும் ஊழியர்கள் அதனை மாற்றி விட்டதாக தெரிவித்துள்ளார்.மேலும் மருத்துவமனை ஊழியர்கள் தங்களை மிரட்டியதாக கூறி காவல் நிலையம் முன்பு தர்ணாவில் ஈடுபட்டனர்.அதன் பின்னர் காவல்துறையினர் அவர்களை சமாதானம் செய்து வைத்து அனுப்பினர்.
இது குறித்து காவல்துறையிடம் கேட்டபோது ஒரு சில குடும்பத்தினர் பெண் குழந்தைகள் என்றால் கணவர் பிரச்னைகள் செய்வார்கள் என இது போன்று தவறான தகவலை தெரிவித்து காவல்துறை விசாரணையில் பின்னர் உண்மை நிலை தெரிய வரும். இந்த விவகாரத்தில் முழுமையான விசாரணைக்கு பின்னரே முழு விவரம் தெரியவரும். கண்காணிப்பு கேமரா காட்சிகளை ஆய்வு செய்ய உள்ளதாகவும் தெரிவித்துள்ளனர்.