தமிழ்நாடு

காதலித்த பெண்ணோடு ஊரை விட்டு சென்ற அண்ணன்! தம்பி மர்ம மரணம் - உறவினர்கள் புகார்

webteam

மதுரையில் போலீஸ் விசாரணைக்கு அழைத்துச் செல்லப்பட்ட இளைஞர் தூக்கில் தொங்கிய நிலையில் சடலமாக மீட்கப்பட்டுள்ளார். காவல்துறையினர் மீது நடவடிக்கை எடுக்கக்கூறி உறவினர்கள் போராட்டத்தில் ஈடுபட்டு வருகின்றனர்.

மதுரை மாவட்டம் பேரையூரை அடுத்த வாழத்தோப்பு கிராமத்தை சேர்ந்தவர் ரமேஷ். பொறியியல் பட்டதாரி. இவர் மரத்தில் தூக்கில் தொங்கிய நிலையில் சடலமாக மீட்கப்பட்டுள்ளார். இவரின் அண்ணன் அதேபகுதியைச்சேர்ந்த பெண் ஒருவரை காதல் திருமணம் செய்ய அழைத்துக்கொண்டு இரண்டு நாட்களுக்கு முன்பு ஊரைவிட்டு வெளியேறியதாக கூறப்படுகிறது.

இதுதொடர்பாக பெண்ணின் பெற்றோர் சாத்புர் காவல்நிலையத்தில் புகார் அளித்துள்ளனர். இதையடுத்து அண்ணனை அழைத்துக்கொண்டு காவல்நிலையம் வரவில்லை என்றால் உங்கள் மீது நடவடிக்கை எடுக்கப்படும் எனத் தெரிவித்ததாகவும் இதன் காரணமாக அச்சத்தில் அவர் தூக்கிட்டு தற்கொலை செய்து கொண்டுள்ளார் என போலீசார் தரப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

ஆனால் உறவினர் தரப்பில் கூறுகையில், ரமேஷை போலீசார் விசாரணைக்காக காவல்நிலையம் அழைத்துச் சென்று அவரை தாக்கி கொலை செய்துவிட்டு தற்கொலை போன்று மரத்தில் தொங்கவிட்டுள்ளதாக குற்றம்சாட்டுகின்றனர். மேலும் போலீசார் மீது நடவடிக்கை எடுக்கக்கோரி போராட்டத்திலும் ஈடுபட்டு வருகின்றனர்.