கடலூர் கல்லூரி மாணவி திலகவதி கொலை வழக்கை சிபிசிஐடி விசாரணைக்கு மாற்றக்கோரி அவரது தந்தை சென்னை உயர்நீதிமன்றத்தில் மனு தாக்கல் செய்துள்ளார்.
கடலூர் மாவட்டம் விருத்தாசலம் அருக்கே உள்ள கருவேப்பிலங்குறிச்சியை சேர்ந்த சுந்தரமூர்த்தி என்பவரின் மகள் திலகவதி. கல்லூரி மாணவியான இவர் சமீபத்தில் கத்தியால் குத்தி கொலை செய்யப்பட்டார். இதனையடுத்து, மாணவியை கொலை செய்ததாக ஆகாஷ் என்ற இளைஞர் கைது செய்யப்பட்டார். கல்லூரியிலிருந்து திரும்பிய அந்த மாணவி தனியாக இருந்த போது, ஆகாஷ் வீடு புகுந்து வாக்குவாதத்தில் ஈடுபட்டதாகவும், அதுவே அந்த வாக்குவாதமே கொலையாக மாறியது என விசாரணையில் தெரியவந்தது.
இந்நிலையில், மாணவி திலகவதி கொலை வழக்கை சிபிசிஐடி விசாரணைக்கு மாற்றக்கோரி அவரது தந்தை சென்னை உயர்நீதிமன்றத்தில் மனு தாக்கல் செய்துள்ளார். அதில், விசாரணை அதிகாரி தன்னுடைய விசாரணை சுதந்திரமாகவும், நியாமான முறையில் விசாரணை மேற்கொள்ளவில்லை. தற்போதைய விசாரணை அதிகாரி குற்றவாளிக்கு சாதகமாக செயல்படுவதாகவும், விசாரணை அதிகாரி உண்மையை மறைத்து காதல் விவகாரம் என வழக்கை மறைக்க பார்க்கின்றார் எனவும் குற்றம் சாட்டியுள்ளார்.
மேலும் உடனடியாக பெண்களுக்கு எதிரான குற்ற வழக்குகளில் பாதிக்கப்படும் குடும்பங்களுக்கு அரசு அளிக்கும் இடைக்கால இழப்பீட்டு தொகையை உடனடியாக வழங்க உத்தரவிட வேண்டும் என்றும் இதுவரை நடைபெற்ற விசாரணை தொடர்பான விபரங்களை நீதிமன்றத்தில் தாக்கல் செய்ய உத்தரவிட வேண்டும் எனவும் மனுவில் கூறியுள்ளார். இந்த வழக்கு ஓரிரு நாளில் விசாரணைக்கு வரவுள்ளது குறிப்பிடத்தக்கது.