தமிழகம் முழுவதும் டெங்கு, பன்றிக்காய்ச்சல் உள்ளிட்ட நோய்களின் தாக்கம் குறித்து மாவட்ட ஆட்சியர்கள் ஆய்வுகளைத் தீவிரப் படுத்தியுள்ளனர்.
கடலூர் நகராட்சிக்கு உட்பட்ட பகுதிகளில் சுகாதாரதுறை அதிகாரிகளுடன் ஆட்சியர் அன்புச்செல்வன் ஆய்வு மேற்கொண்டார். இதில் பல இடங்களில் டெங்கு கொசுக்களின் லார்வாக்கள் உற்பத்தியானது கண்டுபிடிக்கப்பட்டது. இதையடுத்து சம்பந்தப்பட்ட நிர்வாகத்துக்கு ஆட்சியர் அபராதம் விதித்தார்.
இதே போல்,திருவள்ளூர் மாவட்டத்தில் காய்ச்சல் மற்றும் தொற்று நோய்கள் பரவாமல் தடுக்கும் வகையில் குடியிருப்புகள் பகுதிகளில் புகை தெளிப்பான்கள் பொருத்தப்பட்ட வாகனங்களை ஆட்சியர் மகேஸ்வரி கொடியசைத்து தொடங்கி வைத்தார். மேலும், காய்ச்சலை கட்டுப்படுத்த தேவையான மருந்து, மாத்திரைகள் கையிருப்பு உள்ளன என்றும் அவர் தெரிவித்தார்.மேலும் திருவள்ளூர் மாவட்டத்தில் டெங்கு பாதிப்பால் யாரும் உயிரிழக்கவில்லை என ஆட்சியர் மகேஸ்வரி தெரிவித்துள்ளார்.
திருவண்ணாமலையில் டெங்கு ஒழிப்பு நடவடிக்கைகள் குறித்து மாவட்ட ஆட்சியர் கந்தசாமி ஆய்வு மேற்கொண்டார். டெங்கு மற்றம் பன்றிக் காய்ச்சல் பரவாமல் தடுக்கும் நோக்கில் சுகாதார நடவடிக்கைகள் மேற்கொள்ளப்பட்டு வருகின்றன. இந்நிலையில் வேட்டவலம் ரோடு, அஜீஸ் காலனி, திருக்கோவிலூர் ரோடு உள்ளிட்ட பல பகுதிகளில் டெங்கு ஒழிப்பு பணிகள் எவ்வாறு மேற்கொள்ளப்பட்டுள்ளன என ஆட்சியர் கந்தசாமி வீடு வீடாக சென்று ஆய்வு செய்தார். இதனைதொடர்ந்து ஆட்சியர் கந்தசாமி ஆய்வு மேற்கொண்டு குறைகள் இருந்ததைக் கண்டு அதை நிவர்த்தி செய்யவும் உத்தரவிட்டார்.
காஞ்சிபுரம் மாவட்டத்தில் ஒரகடம் பகுதியில் தொழிற்சாலைகளில் மாவட்ட ஆட்சியர் பொன்னையா தலைமையில் டெங்கு கொசு ஒழிப்பு ஆய்வு மேற்கொள்ளப்பட்டது. இதில் தனியார் கார் உற்பத்தி தொழிற்சாலையில் கட்டுமானப்பிரிவு பகுதியில் வீணான பொருட்களை கொட்டி வைத்திருந்த இடம், கொசு உற்பத்தியாகக் கூடிய வகையில் இருந்ததை கண்டு ஆட்சியர், அந்தத் தொழிற்சாலைக்கு ஒரு லட்சம் ரூபாய் அபராதம் விதித்தார்.
இதனைத் தொடர்ந்து சென்னை சைதாப்பேட்டையில் உள்ள அரசினர் குடியிருப்பு பகுதியில் டெங்கு மற்றும் பன்றிக் காய்ச்சலை தடுப்பதற்கான விழிப்புணர்வு பிரச்சாரதில் சுகாதாரத் துறை முதன்மைச் செயலர் ராதாகிருஷ்ணன் தலைமையில் நடைபெற்றது. அப்போது, டெங்கு மற்றும் பன்றிக் காய்ச்சல் பரவும் முறை மற்றும் அதை தடுப்பதற்கான நடவடிக்கைகள் அடங்கிய துண்டு பிரசுரங்கள் வழங்கி விழிப்புணர்வு ஏற்படுத்தப்பட்டது.
பிறகு கொசு ஒழிப்பு பணிகளும் தொடங்கப்பட்டது. இதனையடுத்து செய்தியாளர்களிடம் பேசிய சுகாதாரத்துறை செயலாளர் ராதாகிருஷ்ணன், டெங்கு, பன்றிக்காய்ச்சல் குறித்து எந்த அச்சமும் கொள்ளத் தேவையில்லை. தமிழகத்தில் டெங்கு மற்றும் பன்றிக்காய்ச்சலில் இதுவரை 11 பேர் உயிரிழந்துள்ளனர். ஆனால் மக்கள் பீதியடைய வேண்டாம் என்று தெரிவித்துள்ளார்.