தமிழ்நாடு

கோயம்பேடு: லாரி மீது அமர்ந்து மது அருந்திய கிளீனருக்கு நேர்ந்த பரிதாபம்

kaleelrahman

சென்னை கோயம்பேட்டில் லாரி மீது அமர்ந்து மது அருந்திய கிளீனர் நிலைதடுமாறி கீழே விழுந்து உயிரிந்தார் இதன் சிசிடிவி காட்சிகள் வெளியாகி பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.

ஆந்திர பிரதேச மாநிலம் குர்னூல் மாவட்டத்தைச் சேர்ந்தவர் ராஜ். இவர் லாரி கிளீனராக பணியாற்றிய இவர், நேற்று வெங்காயம் லோடு இறக்குவதற்காக லாரியில் கோயம்பேடு மார்க்கெட்டிற்கு வந்துள்ளார். இதையடுத்து லாரி மீது அமர்ந்து ராஜ், லாரி ஓட்டுநர் பங்காரப்பா, இவரது நண்பர்கள் கிருஷ்ணன், மகேஷ் ஆகிய 4 பேரும் இணைந்து மது அருந்தியுள்ளனர்.

அப்போது போதையில் இருந்த ராஜ் பின்புறமாக நகர்ந்து சென்றபோது லாரியில் இருந்து நிலைதடுமாறி பின்புறமாக கீழே விழுந்தார். இதில், தலையில் பலத்த காயமடைந்த அவர் சம்பவ இடத்திலேயே உயிரிழந்தார். இது குறித்து கோயம்பேடு போலீசாருக்கு அளித்த தகவலின் பேரில் சம்பவ இடத்திற்கு வந்த போலீசார், உயிரிழந்த ராஜ் உடலை மீட்டு பிரேத பரிசோதனைக்காக கீழ்ப்பாக்கம் அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர்.

இந்நிலையில் ராஜ் லாரியிலிருந்து கீழே விழுந்து உயிரிழந்த பதறவைக்கும் சிசிடிவி காட்சிகள் வெளியாகி உள்ளது. சிசிடிவி காட்சிகளை வைத்து போலீசார் தீவிர விசாரணை நடத்தி வருகின்றனர்.