தமிழ்நாடு

சுற்றுச்சூழலை பாதுகாக்க தோன்றியுள்ள ‘கிரீன் கணபதி’

சுற்றுச்சூழலை பாதுகாக்க தோன்றியுள்ள ‘கிரீன் கணபதி’

webteam

விநாயகர் சதுர்த்தியை முன்னிட்டு, சுற்றுச்சூழலுக்கு மாசு ஏற்படாத வகையில் பல விநாயகர் சிலையை தயாரித்து அசத்தி வருகின்றனர் கோவையை சேர்ந்த இளைஞர்கள்.

விநாயகர் சதுர்த்தி இன்னும் சில தினங்களில் வெகு விமர்சையாக நாடு முழுவதும் கொண்டாடப்பட உள்ளது. அந்தக் கொண்டாட்டத்தின் முடிவாக விநாயகர் சிலைகளை ஊர்வலமாக கொண்டு சென்று குளம், குட்டைகளில் கரைப்பது வழக்கம். அவ்வாறு கரைக்கப்படும் சிலைகள் ஏற்படுத்தும் பாதிப்பை பற்றி பலரும் யோசிப்பதில்லை. ரசாயனங்களால் தயாரிக்கப்படும் விநாயகர் சிலைகளை ஆற்றில் கரைப்பதால் நீர்நிலைகள் மாசுபடுகின்றன.

இதனை தடுக்க சுற்றுச்சூழல் பாதுகாப்பு அமைப்பு ஒன்றை நடத்தி வருகின்றனர் கோவையை சேர்ந்த இளைஞர்கள். இவர்கள் பசுமை கணபதி என்ற விநாயகர் சிலையை தயாரித்துள்ளனர். 

இந்தச் சிலை முற்றிலும் களிமண்ணால் உருவாக்கப்பட்டது. இதில் இரண்டு வகைகள் உள்ளன. அபார்ட்மெண்ட்டில் வாழும் நகரவாசிகளுக்கு ஏற்ப சிலையில் தக்காளி, வெண்டை, முருங்கை உள்ளிட்ட விதைகளை சிலையில் இணைத்து உள்ளனர். அதனை வீட்டு தோட்டத்திலேயே கரைப்பதால்  சிலையிலுள்ள விதை முளைக்கத் துவங்கி விடும்.

அதே போல குளத்தில் கரைக்கும் விநாயகர் சிலைகளில் மீன்கள், பறவைகள் உட்கொண்டு பயன்  பெரும் வகையில் மாக்காச்சோளம், கோதுமை, ரவை உள்ளிட்ட உணவு பண்டங்களை இணைத்து தயாரித்துள்ளனர். ஆக உயிர்சூழலுக்கு ஏற்ப இது வடிவமைக்கப்பட்டுள்ளது.  

எவ்வித லாப நோக்கமும் இல்லமால் செயல்பட்டு வருகிறது இந்த அமைப்பு. இந்தச் சிலைகளில் ஒரு அட்டை இணைக்கப்பட்டு, அதில் இந்தப் பசுமை கணபதியின் சிறப்புகள் மற்றும் அதில் உள்ளே வைக்கப்பட்டுள்ள விதைகளின் விவரங்கள் எழுதப்பட்டுள்ளது. இவர்கள் உருவாக்கிய விநாயகர் சிலை மக்கள் மத்தியில் மிகுந்த வரவேற்பை பெற்றுள்ளது.