தமிழ்நாடு

தலையில் கல்லை போட்டு தொழிலாளி கொலை: பல கோணங்களில் போலீசார் விசாரணை

kaleelrahman

கோவையில் தூக்கிக் கொண்டிருந்த தொழிலாளியின் தலையில் கல்லை போட்டு கொலை செய்த நபரை போலீசார் தேடி வருகின்றனர்.

கோவை சாய்பாபா காலனி அருகே உள்ள எம்.ஜி.ஆர் மார்க்கெட்டில் ஏராளமானோர் தொழிலாளிகளாக வேலை பார்த்து வருகின்றனர். இவர்கள் வேலை முடிந்ததும் அந்த பகுதியில் உள்ள கடைகளுக்கு முன்பு படுத்துத் தூங்குவதை வழக்கமாக கொண்டுள்ளனர்.

இந்நிலையில், மார்க்கெட்டில் ஓட்டுனராக வேலை பார்த்து வரும் சண்முகம் (45), என்பவர் நேற்றிரவு வேலை முடிந்ததும் அந்த பகுதியில் உள்ள கடை முன்பு படுத்து தூங்கியுள்ளார். அப்போது அந்த வழியாக சென்ற மர்ம நபர், சண்முகத்தின் தலையில் கல்லால் தாக்கி கொலை செய்து விட்டு தப்பிச் சென்றுள்ளனர்.

இதனை பார்த்த அந்த வழியாகச் சென்ற பொதுமக்கள் இதுகுறித்து சாய்பாபா காலனி போலீசாருக்கு தகவல் தெரிவித்தனர். தகவல் அறிந்து சம்பவ இடத்திற்க்கு விரைந்த போலீசார், முன் விரோத காரணமாக கொலை செய்யப்பட்டாரா அல்லது வழிப்பறி நபர்களால் கொலை செய்யப்பட்டாரா என்ற கோணத்தில் விசாரணை நடத்தி வருகின்றனர்.