தமிழ்நாடு

கோவை: மின்வேலியில் சிக்கி ஆண் யானை பரிதாப உயிரிழப்பு

கோவை: மின்வேலியில் சிக்கி ஆண் யானை பரிதாப உயிரிழப்பு

kaleelrahman

கோவை அருகே விவசாய நிலத்தில் அமைக்கப்பட்டிருந்த மின்வேலியில் சிக்கி ஆண்யானை உயிரிழந்தது. வனத்துறையினர் விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.

கோவை நரசிபுரம் மேற்குத் தொடர்ச்சி மலை அடிவாரப் பகுதியில் உள்ள தொண்டாமுத்தூர் இருட்டுப்பள்ளம் செம்மேடு ஆலாந்துறை மற்றும் ஆனைகட்டி கணுவாய் ஆகிய பகுதிகளில் யானைகள் நடமாட்டம் ஊருக்குள் அதிகமாக உள்ளது, விவசாய நிலங்களை யானைகள் சேதப்படுத்தி செல்வதாகக் கூறி மின் வேலிகள் அமைக்கப்படுவது வழக்கம்.

இந்நிலையில், கோவை மாவட்டம் தொண்டாமுத்தூர், வனச்சரகத்தில் உட்பட்ட ஆலந்துறை, இருட்டுப்பள்ளம், செம்மேடு கிராமம் பகுதியில் உள்ள குளத்து ஏரி பகுதியில் காளியப்பன் என்பவருக்கு சொந்தமான நிலத்தை துரை என்கிற ஆறுச்சாமி என்பவர் குத்தகைக்கு எடுத்துள்ளார். பின்பு நிலத்தை சுற்றி மின்வேலி அமைத்திருந்தார்.

இதையடுத்து காட்டுயானை ஒன்று அந்தப் பகுதியில் உணவுக்காக வந்த நிலையில் மின்வேலியில் சிக்கி உயிழந்தது. இன்று அதிகாலை இயற்கை உபாதை கழிக்கச் சென்ற அப்பகுதி மக்கள் யானை இறந்து கிடந்ததை பார்த்து தொண்டாமுத்தூர் வனச்சரகத்தினருக்கு தகவல் தெரிவித்தனர். சம்பவ இடத்திற்கு வனத்துறையினர் மற்றும் மின்வாரிய அதிகாரிகள் வந்து பார்த்தபோது பிரதான மின் கம்பத்தில் இருந்து மின்சாரத்தை முறைகேடாக எடுத்தது தெரியவந்தது.

மேலும் விவசாய நிலத்திற்கு மின்வேலி அமைத்திருந்த துரை என்கிற ஆறுச்சாமியை தேடி வருகின்றனர். இந்த சம்பவம் தொடர்பாக வனத்துறையினர் தீவிர விசாரணையில் ஈடுபட்டு வருகின்றனர். மின்வேலியில் சிக்கி யானை உயிரிழந்த சம்பவம் அப்பகுதி மக்களிடையே சோகத்தை ஏற்படுத்தியுள்ளது. சமூக வலைத்தளங்களிலும் பலர் இறந்த யானை படத்தை பதிவிட்டு தங்களது வருத்தங்களை தெரிவித்து வருகின்றனர்.