தமிழ்நாடு

கோவை: தாயின் இழப்பை தாங்க முடியாமல் கல்லூரி மாணவர் எடுத்த விபரீத முடிவு!

webteam

கோவை பாரதியார் பல்கலைக்கழக மாணவர் விடுதியில் தூக்கிட்டு தற்கொலை செய்த சம்பவம், கல்லூரி மாணவர்களிடையே சோகத்தை ஏற்படுத்தியுள்ளது.

திருநெல்வேலி மாவட்டம் சேரன்மகாதேவி தாலுகா, முக்கூடலை அடுத்த அமர்நாத் காலனியைச் சேர்ந்தவர் ஜார்ஜ் வில்லியம். இவரது மகன் பென்னிஸ்குமார்(24). இவர், கோவை பாரதியார் பல்கலைக்கழகத்தில் எம்.பி.ஏ முதலாம் ஆண்டு படித்து வந்திருக்கிறார். பல்கலைக்கழக வளாகத்தில் உள்ள திருவள்ளுவர் விடுதியில் தங்கி வகுப்புக்குச் சென்று வந்துள்ளார் பென்னிஸ்குமார்.

இந்நிலையில், மாணவர் பென்னிஸ்குமார் உடல்நிலை சரியில்லை எனக்கூறி நேற்று மதியம் வகுப்புக்கு செல்லாமல் விடுதி அறையிலேயே இருந்துள்ளார். சக மாணவர்கள் வழக்கம் போல் வகுப்புக்குச் சென்றுவிட்டு மாலை வந்து பார்த்த போது, அறையின் கதவு உள் பக்கமாக தாழிடப்பட்டிருந்துள்ளது.

அவர்கள் ஜன்னல் வழியாக பார்த்த போது, பென்னிஸ்குமார் தூக்கில் தொங்கியபடி இருந்துள்ளார். மாணவர்கள் கதவை உடைத்து உள்ளே நுழைந்து அவரை மீட்டு சிகிச்சைக்காக அருகிலுள்ள தனியார் மருத்துவமனைக்கு அழைத்துச் சென்றுள்ளனர். அங்கு மருத்துவர்கள் பரிசோதித்த போது மாணவர் பென்னிஸ்குமார் உயிரிழந்தது தெரியவந்தது. இதுகுறித்து தகவல் அறிந்த வடவள்ளி போலீஸார் சம்பவ இடத்துக்கு வந்து சடலத்தை மீட்டு பிரேதப் பரிசோதனைக்காக கோவை அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர்.

போலீஸாரின் விசாரணையில், தாய் உயிரிழந்ததால் மனமுடைந்த நிலையில் காணப்பட்டு வந்த பென்னிஸ்குமார் தூக்கிட்டு தற்கொலை செய்து கொண்டது தெரியவந்ததாக சொல்லப்படுகிறது. கடந்த இரு ஆண்டுகளுக்கு முன்னர் இவரது தாயார் மல்லிகா உயிரிழந்திருக்கிறார். அதிலிருந்து தாயார் நினைவாகவே மாணவர் பென்னிஸ்குமார் இருந்து வந்தார் என்று சொல்லப்படுகிறது.

தற்கொலை எதற்கும் தீர்வல்ல. மன அழுத்தம் ஏற்பட்டாலோ, தற்கொலை எண்ணம் வந்தாலோ, அதில் இருந்து விடுபடுவதற்கு தமிழக சுகாதார சேவை உதவி மையம் - 104 , சினேகா தற்கொலை தடுப்பு உதவி மையம் - 044-24640050 ஆகிய எண்களை அழைக்கலாம்."