தமிழ்நாடு

கோவையில் நேற்றிரவும் இரு இடங்களில் பெட்ரோல் குண்டு வீச்சு – போலீசார் தீவிர விசாரணை

webteam

குனியமுத்தூர் காவல் நிலைய எல்லை பகுதியில் இரு இடங்களில் பெட்ரோல் குண்டு வீசப்பட்ட சம்பவத்தால் பரபரப்பு ஏற்பட்டது.

கோவை குனியமுத்தூர் காவல் நிலைய எல்லை பகுதியில் இரு இடங்களில் பெட்ரோல் குண்டு வீசப்பட்ட நிலையில், குனியமுத்தூர், ஆத்துப்பாலம் உள்ளிட்ட பகுதிகளில் போலீசார் தீவிர ரோந்து பணியில் ஈடுபட்டுள்ளனர். குனியமுத்தூர் இடையார்பாளையம் சுப்புலட்சுமி நகர் பகுதியைச் சேர்ந்தவர் பரத். பாஜகவை சேர்ந்த இவர், தண்ணீர் பாட்டில் விநியோகம் செய்யும் நிறுவனம் நடத்தி வருகிறார்.

இந்நிலையில், நேற்றிரவு அவரது வீட்டின் வாசலில் நிறுத்தி வைக்கப்பட்டிருந்த போர்டு காரின் மீது, இருசக்கர வாகனத்தில் வந்த நபர்கள் பெட்ரோல் குண்டை வீசிச் சென்றனர். அதேபோல் கோவைப்புதூர் பகுதியை சேர்ந்தவர் ஆனந்த கல்யாண கிருஷ்ணன். இவர் ஆர்.எஸ்.எஸ் அமைப்பின் அமைப்பாளராகவும் சம்ஸ்கிருத பாரதி அமைப்பின் தமிழக - கேரள பொறுப்பாளராகவும் இருந்து வருகிறார்.

இதையடுத்து நேற்றிரவு இருசக்கர வாகனத்தில் வந்த நபர்கள் அவரது வீட்டின் மீது பெட்ரோல் குண்டை வீசி விட்டு தப்பி ஓடினர். சத்தம் கேட்டு வெளியில் வந்த அவரது குடும்பத்தினர் வீட்டில் பெட்ரோல் குண்டு வீசி இருப்பதைக் கண்டு அதிர்ச்சியடைந்தனர். இந்நிலையில் அடுத்தடுத்த சம்பவங்கள் குனியமுத்தூர் காவல் நிலையம் எல்லைக்குள் நடைபெற்றதால் அனைத்து சாலைகளிலும் போலீசார் வாகன சோதனையில் ஈடுப்பட்டனர்.