செய்தியாளர்: பிரவீண்
கோவை மாவட்டம் பொள்ளாச்சியில் 10 ஆவது சர்வதேச பலூன் திருவிழா ஜனவரி 14 முதல் 16ஆம் தேதி வரை நடைபெற்றது. இந்த நிலையில் நேற்று (16 ஆம் தேதி) 3 நபர்களுடன் புறப்பட்ட ராட்சத பலூன் ஒன்று பாலக்காடு பத்தான்சேரி பகுதியில் தரை இறங்கியது. தகவல் அறிந்து அரை மணி நேரத்தில் நிகழ்விடத்திற்கு விரைந்து வந்து பலூனில் பயணித்தவர்களை மீட்டனர்.
போதிய எரிபொருள் இல்லாததால் பலூன் திட்டமிட்ட இடத்தில் இறங்காமல் வயல வெளிக்குள் இறங்கியதாக முதற்கட்ட தகவலாக தெரிவிக்கப்பட்டுள்ளது. பலூன் இறங்கிய இடத்தில் உயர் மின்னழுத்த கம்பிகள் சென்று கொண்டிருந்த நிலையில் நல்வாய்ப்பாக பலூனில் பயணித்தவர்கள் உயிர் தப்பியுள்ளனர்.
கடந்த சில தினங்களுக்கு முன் இதே போல ஒரு ராட்சத பலூன் எரிபொருள் தட்டுப்பாடு காரணமாக பாலக்காடு கன்னிமாரி பகுதியில் தரை இறங்கியது குறிப்பிடத்தக்கது.