தமிழ்நாடு

கணவன் மீது மனைவி கொடுத்த பொய் புகார் - போக்சோ வழக்கில் அம்பலமான உண்மை

kaleelrahman

தங்கையை பாலியல் வன்கொடுமை செய்ததாக கணவர் மீது பொய்புகார் அளித்த மனைவிக்கு அபராதம் விதித்து கோவை போக்சோ சிறப்பு நீதிமன்றம் தீர்ப்பளித்துள்ளது.

கோவை பொள்ளாச்சி நல்லூத்துக்குளி அரிஜன காலனியைச் சேர்ந்தவர் பாண்டியன். இவரது மனைவி ரோகிணி, தனது 16 வயது தங்கையை 2019 ஆம் ஆண்டு வீட்டில் யாரும் இல்லாதபோது மிரட்டி, பாண்டியன் பாலியல் வன்கொடுமை செய்ததாக பொள்ளாச்சி அனைத்து மகளிர் காவல் நிலையத்தில் புகார் அளித்தார். இதேபோல, 2018 மற்றும் 2019 ஆம் ஆண்டு என 2 முறை கட்டாயப்படுத்தி பாலியல் வன்கொடுமை செய்ததாகவும், இதுகுறித்து கேட்டபோது தனது தங்கையை வேறு யாருக்கேனும் திருமணம் செய்துவைத்தால், அவளை கொன்றுவிடுவேன் என தெரிவித்ததாகவும் புகாரில் குறிப்பிட்டிருந்தார்.

இதையடுத்து, குழந்தைகளுக்கு எதிரான பாலியல் குற்ற தடுப்பு (போக்சோ) சட்டத்தின்கீழ் போலீசார் வழக்குப்பதிவு செய்தனர். இந்த வழக்கு கோவை ஒருங்கிணைந்த நீதிமன்ற வளாகத்தில் உள்ள போக்சோ சிறப்பு நீதிமன்றத்தில் நடைபெற்று வந்தது. விசாரணையின்போது, பிறழ் சாட்சியங்களாக அனைவரும் மாறவே, பாதிக்கப்பட்டதாக கூறப்படும் சிறுமி, அதுபோன்ற சம்பவம் நடக்கவில்லை எனக் கூறினார்.

இதைத் தொடர்ந்து அவ்வப்போது குடிபோதையில் வரும் கணவரை மிரட்டவே இதுபோன்று பொய் புகார் அளித்ததாக புகார் அளித்த பெண் நீதிமன்றத்தில் வாக்குமூலம் அளித்ததன் அடிப்படையில், வழக்கை விசாரித்த நீதிபதி குலேசேகரன், கணவரை மிரட்டுவதற்காக அவர் மீது பொய் புகார் அளித்த ரோகிணிக்கு போக்சோ சட்டப்பிரிவு 22-ன்கீழ் ரூ.2 ஆயிரம் அபராதம் விதித்து, பாண்டியனை விடுதலை செய்து உத்தரவிட்டார்.