செய்தியாளர்: இரா.சரவணபாபு
கோவை மாவட்டம், மேட்டுப்பாளையம் அண்ணாஜி ராவ் ரோடு எக்ஸ்டென்ஷன் வீதி ஒன்றாவது தெருவைச் சேர்ந்தவர் ராஜிக் (35). இரும்பு கடை வைத்துள்ள இவர், எஸ்டிபிஐ கட்சியின் கோவை வடக்கு மாவட்ட அமைப்பு பொதுச் செயலாளராக உள்ளார்.
இந்நிலையில், இன்று காலை இவரது வீட்டில் அமலாக்கத் துறையை சேர்ந்த ஐந்துக்கும் மேற்பட்ட அதிகாரிகள் சோதனை மேற்கொண்டனர்.
அதிக அளவில் சட்டவிரோத பணப்பரிவர்த்தனை நடைபெற்றுள்ளதாக சந்தேகத்தின் பேரில் அமலாக்கத்துறை அதிகாரிகள் சோதனை மேற்கொண்டதாக கூறப்படுகிறது. அதே போல் இரும்பு பொருட்கள் விற்கும் கடை உரிமையாளரும் எஸ்டிபிஐ கட்சி உறுப்பினருமான வாஹித் ரகுமான் (29) மற்றும் மேட்டுப்பாளையம் பேருந்து நிலையத்தில் பழக்கடை நடத்தி வரும் ரீலா (35) என்பவரது கடையிலும் அமலாக்கத்துறை அதிகாரிகள் காலை முதல் சோதனையில் ஈடுபட்டனர்..
கேரளா பதிவு கொண்ட கார்களில் வந்த அமலாக்கத்துறை அதிகாரிகள் மூன்று பிரிவுகளாக பிரிந்து மூன்று இடங்களில் சோதனையில் ஈடுபட்டனர். சோதனை நடைபெறும் வீடுகளில் இருந்து யாரும் வெளியேறவோ புதிதாக யாரும் உள்ளே நுழையவோ அனுமதிக்கப்படவில்லை. சோதனை நடைபெற்ற இடங்களின் வெளியே துப்பாக்கி ஏந்திய சிஆர்பிஎப் போலீசார் பாதுகாப்பு பணியில் ஈடுபட்டனர்.
இந்நிலையில், சோதனை நடைபெறும் வீட்டின் முன்பு திரண்ட எஸ்டிபிஐ கட்சியினர் அமலாக்கத் துறையின் சோதனையை கண்டித்து முழக்கம் எழுப்பி ஆர்பாட்டம் நடத்தினர். இதனால் அப்பகுதியில் பரபரப்பான சூழல் ஏற்பட்டது. இதையடுத்து வாஹித் ரகுமான் வீட்டில் கிடைத்த ஆவணங்களின் அடிப்படையில் அவர் கைது செய்யப்பட்டார். கைது செய்யப்பட்ட வாஹித் ரகுமானை பலத்த பாதுகாப்புடன் அமலாக்கத்துறை அதிகாரில் காரில் அழைத்துச் சென்றனர்.
அப்போது அவரது வீட்டின் முன்பு கூடியிருந்த எஸ்டிபிஐ கட்சியினர் அமலாக்கத் துறைக்கு எதிராக முழக்கம் எழுப்பினர். இந்த சோதனையின் போது காவல்துறை டிஎஸ்பி அதியமான் மற்றும் ஆய்வாளர் சின்னகாமனன் ஆகியோர் தலைமையில் ஐம்பதிற்கும் மேற்பட்ட போலீசார் பாதுகாப்பு பணியில் ஈடுபட்டனர்.