கோவை சரக டிஐஜி விஜயகுமார்
கோவை சரக டிஐஜி விஜயகுமார்  pt web
தமிழ்நாடு

2 நாட்களுக்கு முன்பே நண்பருடன் இதுபற்றி பேசிய கோவை டிஐஜி விஜயகுமார்? வெளியான அதிர்ச்சி தகவல்கள்!

Angeshwar G

கோவை சரக டிஐஜி துப்பாக்கியால் சுட்டு தற்கொலை செய்து கொண்டது பல்வேறு தரப்பினர் மத்தியிலும் அதிர்ச்சியை ஏற்படுத்தியது. அவரது மறைவைத் தொடர்ந்து முதலமைச்சர், எதிர்கட்சித் தலைவர் என பல்வேறு அரசியல் தலைவர்களும் தங்களது இரங்கலை தெரிவித்தனர். அவரது உடல் அவரது சொந்த ஊரான தேனிக்கு கொண்டு செல்லப்பட்டு 21 குண்டுகள் முழங்க இறுதி மரியாதையுடன் தகனம் செய்யப்பட்டது.

கோவை சரக டிஐஜி விஜயகுமார்

இந்நிலையில், காவல்துறையை சேர்ந்த உயரதிகாரிகள் சிலர், “டிஐஜி விஜயகுமாருக்கு இரண்டு நாட்களுக்கு முன்பே தற்கொலை எண்ணம் இருந்துள்ளது. அது குறித்து தனது காவல்துறை அல்லாத நண்பரிடம் அவர் பேசியுள்ளார். அதன் பிறகு அவர்கள் இருவரும் கோவை ஆணை கட்டி அருகே செல்வதற்கு திட்டமிட்டுள்ளனர். அதற்கான நேரம் கிடைக்காததால் மதியம் உணவுடன் முடித்து கொண்டு வந்துள்ளனர்.

அதுமட்டுமல்லாமல் தற்கொலைக்கு முந்தைய தினமும் இரவில் தனது பாதுகாவலரிடம் அந்த துப்பாக்கியை எங்கு வைப்பீர்கள், அதன் தொழில்நுட்பமெல்லாம் எப்படி என்பது குறித்து அவர் பேசியதாக தெரிகிறது. மேலும் நீண்ட நாட்களாகவே மன அழுத்தம் தொடர்பாக சிகிச்சைகளை எடுத்துக் கொண்டிருந்துள்ளார்.

மன அழுத்தம் தொடர்பாக அவரே குறிப்பு எடுத்து வைத்துள்ளார். மருத்துவர்களை அடிக்கடி மாற்றி சிகிச்சை மேற்கொண்டு வந்துள்ளார். இத்துடன் தற்கொலைக்கு குடும்பப் பிரச்சனையும் பணிச்சுமையும் காரணம் அல்ல. விஜயகுமார் தனது குழந்தைக்கான படிப்பு தொடர்பாக அனைத்து விதமான ஏற்பாடுகளையும் ஏற்கெனவே செய்துவிட்டார்.

ஓசிடி-யால் அவர் தீவிர மன அழுத்தத்தில் இருந்துள்ளார். துறை ரீதியாக கோவைக்கு மாறிய பின் பெரிய அளவில் எதுவும் செய்யவில்லை என்ற மன அழுத்தத்தில் அவர் இருந்திருக்கலாம் ” என தெரிவிக்கின்றனர்.

இம்மாதிரியான சூழலில் இன்று காலை ஏடிஜிபி தலைமையில் ஆலோசனைக் கூட்டம் நடந்துள்ளது. கோவை சரகத்திற்கு உட்பட்ட 4 மாவட்டங்களைச் சேர்ந்த முக்கிய அதிகாரிகள் இதில் பங்கேற்றிருந்தனர். அதில் உயரதிகாரிகளின் மன அழுத்தத்தை போக்குவதற்காக சிறப்பு உளவியலாளர்கள் உதவியுடன் விழிப்புணர்வு கொடுப்பதற்கும் ஏற்பாடு செய்துள்ளதாக காவல்துறை அதிகாரிகள் தரப்பில் சொல்லப்பட்டுள்ளது.

தற்கொலை செய்துக்கொண்ட கோவை சரக டிஐஜி விஜயகுமாரின் இறுதி ஊர்வலம்

உயரதிகாரிகள் மட்டுமல்லாமல் கீழ் நிலை அதிகாரிகளுக்கும் இது சம்பந்தமாக மனநலம் சார்ந்த விழிப்புணர்வு ஏற்படுத்த முடியும் என்பது தொடர்பாகவும் ஆலோசனை மேற்கொண்டனர்.