சிங்கப்பெண் சிறப்பு அதிரடிப் படை Pt web
தமிழ்நாடு

சிங்கப்பெண் சிறப்பு அதிரடிப் படை.. முதல்வர் பங்கேற்கவிருந்த தொடக்க விழா ரத்து!

முதல்வர் விஜய் இன்று தொடங்கி வைக்கவிருந்த சிங்கப்பெண் சிறப்பு அதிரடிப்படையின் தொடக்கவிழா திடீரென ரத்து செய்யப்படுவதாக அறிவிக்கப்பட்டிருக்கிறது.

Premkumar S

தமிழக சட்டப்பேரவையின் 17-வது முதல்வராக தவெக தலைவர் விஜய் கடந்த மே-10 ஆம் தேதி பதவியேற்றுக் கொண்டார். பதவியேற்ற முதல்நாளே 200 யூனிட் இலவச மின்சாரம், போதைப்பொருள் தடுப்புப் படை உருவாக்கம் மற்றும் பெண்களின் பாதுகாப்புக்காக சிங்கப்பெண் சிறப்பு அதிரடிப் படை உருவாக்கம் உள்ளிட்ட 3 கோப்புகளில் கையெழுத்திட்டிருந்தார்.

Vijay

இத்திட்டங்கள் மக்களிடையே வரவேற்பை பெற்றிருந்த நிலையில், மே 11-ம் தேதி சிங்கப்பெண் சிறப்பு அதிரடிப் படைக்கான அரசாணையை தமிழக அரசு வெளியிட்டது. அதில், முதல்வரின் நேரடிக் கண்காணிப்பில் இயங்கும் சிங்கப்பெண் சிறப்பு அதிரடிப்படையில், ஐஜி தலைமையில் 1 எஸ்.பி, 2 டி.எஸ்.பி மற்றும் 4 காவல் ஆய்வாளர்கள் இடம்பெறுவார்கள் எனவும் குற்றச் சம்பவங்கள் நிகழ வாய்ப்புள்ள இடங்களை கண்காணித்து பாதுகாப்பான சூழலை உருவாக்கும் நோக்கில் இந்த திட்டம் செயல்படும் எனவும் தெரிவிக்கப்பட்டிருந்தது. இந்தசூழலில் தான், இந்த திட்டத்தின் தலைமை அதிகாரியாக ஐ.ஜி கே. பவானிஸ்வரி நியமிக்கப்பட்டுள்ளார்.

அவர் அந்த படை உருவாக்குவதற்கான பணிகளில் தீவிரமாக ஈடுபட்டுள்ள நிலையில், அந்த படையில் பணியாற்றும் போலீசாருக்கென்று தனியாக பிரேத்யேகமாக சீருடை சமீபத்தில் வெளியிடப்பட்டது. இதில், கருப்பு நிற தொப்பி முன்புறத்தில் சின்னத்துடன் வழங்கப்பட உள்ளதாக கூறப்படுகிறது. மேலும், நேவி ப்ளூ நிற அரைக்கை சட்டையில் தோள்பகுதியில் இரண்டு வெள்ளி நட்சத்திரங்கள் பொருத்தப்பட உள்ளதாவும், காகி நிற கால்சட்டை நேர்த்தியான முன் மடிப்புடன் வடிவமைக்கப் பட்டுள்ளதுடன் கருப்பு நிற காலணிகள் பணிக்கேற்ற வகையில் இலகுவாகவும் வசதியாகவும் இருக்க ஏற்பாடு செய்யப்பட்டுள்ளதாகவும் கூறப்படுகிறது.

இந்தநிலையில் தான், அரசு முறைப்பயணமாக டெல்லி சென்றிருந்த முதல்வர் விஜய் சென்னை திரும்பியிருக்கும் நிலையில், இன்று மாலை எழும்பூர் ராஜரத்தினம் மைதானத்தில் சிங்கப்பெண் சிறப்பு அதிரடிப்படையின் தொடக்கவிழா நடைபெறும் எனவும் அதில், முதல்வர் விஜய் கலந்து கொண்டு இப்படையை தொடங்கிவைப்பார் எனவும் தெரிவிக்கப்பட்டிருந்தது. இதையடுத்து, இந்நிகழ்வுகளுக்கான ஏற்பாடுகளும் தீவிரமாக நடைபெற்று வந்தன. எனினும், இந்த தொடக்கவிழா தற்போது ரத்து செய்யப்படுவதாக, அறிவிக்கப்பட்டிருக்கிறது. இதற்கான, காரணங்கள் அரசு தரப்பில் இருந்து தெரிவிக்கப்படவில்லை எனினும் இவ்விழாவுக்கான மாற்றுத் தேதி விரைவில் அறிவிக்கப்படும் எனத் தெரிவிக்கப்பட்டிருக்கிறது.