விஜய் - டி.கே. சிவகுமார் Pt web
தமிழ்நாடு

ஆக.3-ல் முதல்வர் விஜய் கர்நாடகா பயணம்.. உடன் செல்வது யார்? யார்?.. வெளியானது பட்டியல்!!

முதல்வர் விஜயுடன் கர்நாடகா செல்லும் 13 பேர் அடங்கிய பட்டியல் வெளியிடப்பட்டுள்ளது.

Premkumar S

கர்நாடகா - தமிழ்நாடு இரண்டு மாநிலங்களுக்கு இடையே காவிரி நதிநீர்ப் பிரச்னை என்பது பல ஆண்டு காலமாகவே இருந்து வருகிறது. இந்தசூழலில்தான், முதல்வர் விஜய் தலைமையிலான தமிழக அரசின் முதல் சட்டப்பேரவைக் கூட்டத் தொடரின் போது, கர்நாடக அரசு மேகதாது அணை கட்டுவதற்கு எதிர்ப்பு தெரிவித்து தனித் தீர்மானம் கொண்டு வரப்பட்டது. தொடர்ந்து இந்த தீர்மானம் ஒருமனதாகவும் நிறைவேறியிருந்தது.

மேகதாது அணை

அதேசமயம், அண்மையில் நடைபெற்ற காவிரி நீர் மேலாண்மை ஆணையக் கூட்டங்களில் தமிழகத்திற்கு ஜூன் மற்றும் ஜூலை மாதங்களில் கிடைக்க வேண்டிய நீரை கர்நாடகா உடனடியாக திறந்துவிட வேண்டும் எனத் தமிழ்நாடு அரசுத் தரப்பில் வலியுறுத்தப்பட்டது.

ஆனால், குடிநீர் தேவைக்கு மட்டுமே நீர் இருப்பதாகவும், மழைப் பொழிவு குறைவாக இருப்பதால் தமிழகத்திற்குத் தண்ணீர் திறக்க இயலாது என்றும் கர்நாடக அரசு தொடர்ந்து மறுத்து வருகிறது. இந்தசூழலில் தான், மேகதாது அணை மற்றும் காவிரி நதி நீர்ப் பிரச்னை குறித்து கர்நாடக முதல்வருடன் நேரடிப் பேச்சுவார்த்தை நடத்த ஆகஸ்ட் 3-ஆம் தேதி முதல்வர் விஜய் கர்நாடகா செல்லவுள்ளார்.

எனினும், மேகதாது பிரச்னையை சட்ட வழியில் மட்டுமே எதிர்கொள்ள வேண்டும் எனவும் கர்நாடக முதல்வருடனான சந்திப்பு திமுக உள்ளிட்ட எதிர்க்கட்சிகள் விமர்சனம் செய்து வரும் நிலையில், முதல்வர் விஜயின் கர்நாடக பயணத்துக்கு அம்மாநிலத்தை சேர்ந்த அமைப்புகளும் எதிர்ப்பு தெரிவித்து வருகின்றன. எனினும், தமிழக முதல்வர் விஜய்யை மிகுந்த கௌரவத்துடன் வரவேற்கக் காத்திருப்பதாகவும், மேகதாது உள்ளிட்ட கர்நாடக நீர்நிலைகளைப் பார்வையிட ஹெலிகாப்டர் தயார் நிலையில் இருப்பதாகவும் கர்நாடக முதல்வர் டி.கே. சிவகுமார் தெரிவித்திருக்கிறார்.

டிகே சிவகுமார்

இந்தசூழலில் தான், முதல்வர் விஜய் இன்று தலைமைச் செயலகத்தில் மேகதாது அணை விவகாரம் தொடர்பாக கர்நாடக செல்வது தொடர்பாக ஆலோசனையில் ஈடுபட்டார். இதில், சட்டத்துறை அமைச்சர் நிர்மல்குமார், தலைமைச் செயலாளர் உள்ளிட்ட முக்கிய நிர்வாகிகள் கலந்துகொண்டனர். இதில், முக்கிய முடிவுகள் எடுத்ததாக கூறப்பட்டது.

இந்தசூழலில் தான், ஆகஸ்ட் 3-ல் முதல்வர் விஜயுடன் கர்நாடகா செல்லவுள்ள 13 பேர் கொண்டவர்களின் பட்டியல் தற்போது வெளியாகியிருக்கிறது. அதில், நீர்வளத்துறை அமைச்சர் என். ஆனந்த், பொதுப்பணித்துறை அமைச்சர் ஆதவ் அர்ஜுனா, சட்டத்துறை அமைச்சர் நிர்மல்குமார், தலைமைச் செயலாளர் சாய்குமார், முதலமைச்சரின் தனி செயலாளர்கள் செந்தில்குமார் மற்றும் லட்சுமி பிரியா, நீர்வளத் துறை செயலாளர் சத்திய பிரதா சாகு, காவேரி தொழில்நுட்பக் குழுவின் தலைவர் சுப்பிரமணியன், மாநில அரசின் தலைமை வழக்கறிஞர், மூத்த வழக்கறிஞர் உமாபதி, முதலமைச்சரின் தனி ஆலோசகர்கள் ஜான் ஆரோக்கியசாமி மற்றும் விஷ்ணு ரெட்டி ஆகியோர் இடம்பெற்றுள்ளனர். 13பேர் அடங்கிய இந்தக் குழு ஆகஸ்ட் 3-ம் தேதி பிற்பகல் 12 மணிக்கு கர்நாடகா செல்லவுள்ளது.