சென்னை எழும்பூரில் நடைபெற்ற விழாவில், முதல்வர் விஜய் சிங்கப்பெண் சிறப்பு அதிரடிப்படை திட்டத்தை தொடங்கி வைத்து, அதன் இலச்சினை, ஏஐ காணொளி, சிறப்பு வாகனங்களை அறிமுகப்படுத்தினார். பெண்கள், குழந்தைகள் பாதுகாப்புக்காக ரூ.354 கோடி நிதி ஒதுக்கப்படுவதாகவும், இரண்டாம் கட்டத்தில் 2500 புதிய பணியிடங்கள் உருவாக்கப்படும் என்றும், ட்ரோன் கண்காணிப்பும் மேற்கொள்ளப்படும் என்றும் அறிவித்தார்.
குழந்தைகள், பெண்கள் பாதுகாப்புக்கான சிங்கப்பெண் சிறப்பு அதிரடிப்படை திட்டத்தை, முதல்வர் விஜய் தொடங்கிவைத்தார். சென்னை எழும்பூர் ராஜரத்தினம் மைதானத்தில் நடைபெற்ற இந்த விழாவில், முதல்வர் விஜய்க்கு, காவல் துறை சார்பில் அணிவகுப்பு மரியாதை அளிக்கப்பட்டது. அதனைத் தொடர்ந்து தமிழ்த்தாய் வாழ்த்தும் இசைக்கப்பட்டது. பின்னர் சிங்கப்பெண் அதிரடிப்படைக்கான இலச்சினையை முதல்வர் விஜய் வெளியிட, அதனை ஐஜி பவானீஸ்வரி பெற்றுக்கொண்டார். அதனையடுத்து சிங்கப்பெண் சிறப்பு அதிரடிப்படை தொடர்பான ஏஐ காணொளி ஒளிபரப்பப்பட்டது.
அதனை அடுத்து, சிங்கப்பெண் அதிரடிப்படைக்கான சிறப்பு வாகனத்தை அறிமுகம் செய்துவைத்த முதல்வர் விஜய், மேடையில் இருந்து இறங்கிச் சென்று வாகனத்தை ஓட்டியும் பார்த்தார்.
இந்நிகழ்ச்சியில், அமைச்சர்கள், காவல்துறை உயர் அதிகாரிகளுடன் முதல்வர் விஜய்யின் தாயார் ஷோபாவும் கலந்துகொண்டனர்.
நிகழ்ச்சியில் பேசிய விஜய், “பெண்கள் பாதுகாப்புக்காக தொடங்கப்பட்ட சிங்கப்பெண் அதிரடிப்படை திட்டம் மனநிறைவை தந்தாலும், பெண்களுக்கு இழைக்கப்படும் கொடுமைகள் மனதை பதற வைக்கிறது. போதைப் பொருள் நடமாட்டம் அதிகரித்துள்ளதாலே பெண்களுக்கு எதிரான குற்றங்களும், சட்டம் ஒழுங்கு பிரச்சினைகளும் ஏற்படுகிறது. பல ஆண்டுகளாக உள்ள இந்த பிரச்சினையை வேரோடு பிடுங்கி எறிய வேண்டும் என கூறினார்.
மேலும், பெண்களுக்கு எதிரான குற்றங்களில் ஈடுபடுபவர்கள் மீது கடுமையான நடவடிக்கை எடுக்கப்படும் என, முதல்வர் விஜய் உறுதியளித்துள்ளார். அதேநேரத்தில், நிரபராதிகள் யாரும் தண்டிக்கப்படக்கூடாது என்பதில், காவல்துறை அதிகாரிகள் விழிப்புடன் இருக்கவேண்டும் என அறிவுறுத்தினார்.
தொடர்ந்து பேசிய அவர், சிங்கப்பெண் சிறப்பு படைக்காக 354 கோடி ரூபாய்க்கும் அதிகமான நிதி ஒதுக்கப்பட உள்ளதாகவும், திட்டத்தின் இரண்டாம் கட்டமாக, புதிதாக இரண்டாயிரத்து ஐநூறு பணியிடங்கள் உருவாக்கப்படும் என்றும் முதல்வர் விஜய் கூறினார். அதி நவீன வாகனங்களும், உபகரணங்களும் வழங்கப்படும் என்றும் தெரிவித்த அவர், பெண்களும் குழந்தைகளும் மரியாதையுடன் வாழ்வது தான் ஒரு அரசின் முழுமையான வெற்றி என்றும், இந்தியாவிலேயே முதல்முறையாக ட்ரோன்கள் மூலம் பெண்கள் பாதுகாப்பு கண்காணிக்கப்படும் என்றார்.