தமிழ்நாடு அரசு 17-வது சட்டப்பேரவையின் முதல்வராக தவெக தலைவர் விஜய் நேற்று பதவியேற்றுக் கொண்டார். பதவியேற்பு விழா நேரு உள்விளையாட்டு அரங்கில் நேற்று காலை 10 மணிக்கு தொடங்கிய நிலையில், முதல்வரான விஜய் விழா மேடையிலேயே, சிங்கப்பெண் சிறப்பு அதிரடிப்படை உருவாக்கம், 200 யூனிட் கட்டணமில்லா மின்சாரம், போதைப்பொருள் தடுப்பு படை உருவாக்கம் உள்ளிட்ட கோப்புகளில் கையெழுத்திட்டார். இந்தசூழலில், சிங்கப்பெண் சிறப்பு அதிரடிப் படை திட்டம் தொடர்பான அரசாணையை தமிழக அரசு இன்று வெளியிட்டுள்ளது.
தவெகவின் தேர்தல் அறிக்கையில், பெண்களின் பாதுகாப்பை நோக்கமாகக் கொண்டு சிங்கப் பெண் சிறப்பு அதிரடிப் படைத் திட்டம் திட்டம் தெரிவிக்கப்பட்டிருந்தது. இந்த சூழலில் தான், முதல்வராக பொறுப்பேற்ற விஜய் முதலில் கையெழுத்திட்ட கோப்புகளில் இந்தத் திட்டமும் இருந்த நிலையில், அந்தத் திட்டத்திற்கான அரசாணையை தமிழக அரசு வெளியிட்டுள்ளது. அதன்படி, முதல்வரின் நேரடிக் கண்காணிப்பில் இயங்கும் சிங்கப்பெண் சிறப்பு அதிரடிப்படையில், ஐஜி தலைமையில் 1 எஸ்.பி, 2 டி.எஸ்.பி மற்றும் 4 காவல் ஆய்வாளர்கள் இடம்பெறுவார்கள்.
குற்றச் சம்பவங்கள் நிகழ வாய்ப்புள்ள இடங்களை கண்காணித்து பாதுகாப்பான சூழலை உருவாக்க திட்டம்; பேருந்து நிறுத்தம், ரயில் நிலையங்கள், கல்வி நிலையங்களில் சட்டவிரோத செயல்களை தடுக்கும் நோக்கிலும், சமூகநலத்துறை, கல்வித் துறையுடன் ஒருங்கிணைந்து பெண்கள் பாதுகாப்பை மேம்படுத்தும் நோக்கிலும் இந்தத் திட்டம் செயல்படும் எனத் தெரிவிக்கப்பட்டிருக்கிறது. மேலும், பாதிக்கப்பட்டவா்களின் புகாா்கள் மீதும் விரைந்து உரிய நடவடிக்கை எடுக்கப்படுவதுடன், அவா்களை மீட்டு அவா்களின் பாதுகாப்பு மற்றும் நலனை உறுதி செய்வதுடன், இதர உதவிகளும் உரிய நேரத்தில் கிடைக்க வழி வகை செய்யப்படும் எனவும் அரசாணையில் தெரிவிக்கப்பட்டிருக்கிறது