stalin
stalin PT web
தமிழ்நாடு

“தமிழ்நாட்டை காப்பாற்றிவிட்டோம்; அடுத்து இந்தியாவையும்...” - முதல்வர் மு.க.ஸ்டாலின் பேச்சு!

PT WEB

நாகை தொகுதி எம்பி எம். செல்வராஜ் இல்ல திருமண விழா, திருவாரூர் அருகே நடைபெற்றது. இந்த திருமண விழாவை நடத்தி வைத்து, தமிழக முதல்வர் மு.க.ஸ்டாலின் பேசினார். அவர் பேசுகையில், “தற்போது நாடாளுமன்றத் தேர்தல் வரவிருக்கிறது. இது ஆட்சி மாற்றத்துக்கான தேர்தல் மட்டுமல்ல, இந்திய ஜனநாயகத்தைப் பாதுகாத்து - சர்வாதிகார பாஜக பாசிச ஆட்சிக்கு முற்றுப்புள்ளி வைக்க வேண்டிய தேர்தல். கடந்த சட்டமன்றத் தேர்தலில் தமிழ்நாடு காப்பாற்றப்பட்டுவிட்டது. இந்தியாவை காப்பாற்றும் நிலை தற்போது உள்ளது. அதற்காகத்தான் INDIA கூட்டணி உருவாக்கப்பட்டுள்ளது.

stalin

INDIA கூட்டணியில், தமிழகத்தில் உள்ள நமது வலிமையான கூட்டணியும் இடம்பெற்றுள்ளது. இதனால் மோடிக்கு ஆத்திரம் ஏற்பட்டுள்ளது. அதனால் எங்கு சென்றாலும் கூட்டணியைப் பற்றி, திமுகவைப் பற்றி கொச்சைப்படுத்தி பேசி வருகிறார்.

ஊழல் குறித்து பேசும் தகுதி பாஜகவுக்கு இல்லை. இவர்களது ஊழலை மறைக்கவே திமுக மீது அமலாக்கத்துறை, சிபிஐ, வருமானவரித் துறையை விட்டு மிரட்டி பார்க்கின்றனர்.

முதல்வர் மு.க.ஸ்டாலின்

இவற்றுக்கெல்லாம் திமுக அஞ்சாது. நாங்கள் எமர்ஜென்சியை பார்த்தவர்கள். இது பனங்காட்டு நரி, சலசலப்புக்கு அஞ்சாது. திமுக மட்டுமல்ல, இந்தியா கூட்டணியும் எதைப் பற்றியும் கவலைப்படாது. இனியும் இந்தியாவை நீங்கள் ஏமாற்ற முடியாது என்பதை வரவிருக்கின்ற நாடாளுமன்றத் தேர்தல் உணர்த்தும்” என தெரிவித்தார்.