mk stalin
mk stalin Twitter
தமிழ்நாடு

“மதம் மாறினாலும் சாதி மாறுவதில்லை; சாதிய இழிவுகள் ஒழிவதில்லை!”- பேரவையில் முதல்வர் ஸ்டாலின் உரை!

PT WEB

‘கிறித்துவராக மதம் மாறிய ஆதிதிராவிடர்கள், அனைத்து வகையிலும் சமூகநீதியின் பயன்களைப் பெற அரசியலமைப்புச் சட்டத்தில் உரிய திருத்தங்கள் மேற்கொள்ள வேண்டும்’ என மத்திய அரசை வலியுறுத்தும் தனித் தீர்மானத்தை தமிழ்நாடு சட்டமன்றப் பேரவையில் முன்மொழிந்து இன்று நிறைவேற்றினார் முதலமைச்சர் மு.க.ஸ்டாலின். அதன்பின் அவர் உரையாற்றினார். அதன் விவரம் பின்வருமாறு:

“மதம் மாறிய பின்னரும், சாதி ரீதியான பாகுபாடு தொடரவே செய்கிறது!”

“கிறித்துவர்களாக மதம் மாறிய ஆதிதிராவிடர்களையும் பட்டியலின மக்களாக சேர்த்து, அவர்களுக்கும் அரசியலமைப்புச் சட்டத்தில் வழங்கப்பட்டுள்ள அனைத்து உரிமைகளையும் வழங்க வேண்டும் - என்ற தீர்மானத்தை இந்த மாமன்றத்தில் கொண்டு வர விரும்புகிறேன். ஆதிதிராவிடர்களாக இருந்து மதம் மாறிய பின்னரும் தீண்டாமை உள்ளிட்ட சாதிய வன்கொடுமைகளுக்கு அவர்கள் ஆளாவது தொடரவே செய்கிறது. மதம் மாறினாலும் சாதி மாறுவதில்லை; சாதிய இழிவுகள் ஒழிவதில்லை. இதனை கனிவோடு கவனிக்க வேண்டியவர்களாக நாம் இருக்கிறோம்.

mk stalin

நமது நாட்டின் அரசியல் சட்டப்படி இந்து, சீக்கியர், பௌத்த மதத்தைத் தவிர்த்த பிற மதங்களைச் சேர்ந்த யாரும் பட்டியலின வகுப்பைச் சேர்ந்தவராகக் கருதப்பட முடியாது. வரலாற்று ரீதியாகவே அவர்கள் ஆதி திராவிடர் வகுப்பினராக இருக்கும்போது, அவர்களுக்குப் பட்டியலின வகுப்புக்கான உரிமைகளை வழங்குவதே சரியானதாக இருக்கும். அதன் மூலமாகத்தான் அவர்களுக்கு கல்வி, வேலைவாய்ப்பு ஆகியவை கிடைக்கும்.

‘சாதி மாறுதலுக்கு உட்பட்டது அல்ல!’

அதன் மூலமாக சமூகத்தில் அவர்களுக்கான உயர்வும், மேம்பாடும் கிடைக்கும். மதம் மாறிவிட்டார்கள் என்பதற்காக சமூகரீதியாக அவர்களுக்குத் தரப்பட்டு வந்த, அதே சமூகத்தைச் சேர்ந்த மற்றவர்கள் அனுபவித்து வரும் உரிமைகளை இவர்களுக்குத் தர மறுப்பது சரியல்ல என்பதுதான் நமது நிலைப்பாடு. மனிதர்கள் தாங்கள் விரும்பும் மதத்தைப் பின்பற்ற உரிமை உண்டு. ஆனால் சாதி என்பது மாறுதலுக்கு உட்பட்டது அல்ல. சாதி என்பது நீ வேறு; நான் வேறு என்பதாக இல்லாமல், நான் உயர்ந்தவன்; நீ தாழ்ந்தவன் என்ற முறையில் இருக்கிறது.

MK stalin

அதாவது படுக்கைக் கோடாக இல்லாமல், செங்குத்துக் கோடாக இருக்கிறது. மொத்தத்தில் அது சமூகக் கேடாக அமைந்துள்ளது.

“சாதிய ஏற்றத்தாழ்வை வைத்து எந்த வகையில் அடக்கி ஒடுக்கினார்களோ, அதே சாதியை வைத்தே இடஒதுக்கீடு வழங்கி உயர்வடைய வைக்கும் தத்துவம்தான் சமூகநீதித் தத்துவம்”
முதல்வர் மு.க.ஸ்டாலின்

இந்த சமூகநீதித் தத்துவத்தை அனைத்து வகையிலும் முறையாகப் பின்பற்ற வேண்டும் என்பதே திராவிட மாடல் அரசினுடைய நோக்கம். அந்த வகையில் கிறித்துவர்களாக மதம் மாறிய ஆதிதிராவிடர்களுக்கும், அரசியல் சட்ட சமூகநீதி உரிமைகள் தரப்பட வேண்டும் என்பதே சரியான நிலைப்பாடு.

‘கலைஞர் இருந்த போதும், இந்த கோரிக்கையே வைக்கப்பட்டது!’

முத்தமிழறிஞர் தலைவர் கலைஞர் அவர்கள் முதலமைச்சராக இருந்தபோதெல்லாம், 1996, 2006, 2010, 2011 ஆகிய காலக்கட்டங்களில் இதே கோரிக்கையினை நிறைவேற்ற பிரதமருக்கு நேர்முகக் கடிதம் எழுதி, ஒன்றிய அரசைத் தொடர்ந்து வலியுறுத்தியிருக்கிறார். இதே பேரவையில், ஒன்றிய அரசிடம் இந்தக் கோரிக்கை வலியுறுத்தப்படும் என்று 6-1-2011 அன்று ஆளுநர் உரையில் தமிழ்நாடு அரசின் சார்பில் அறிவிக்கப்பட்டுள்ளது. திராவிட முன்னேற்றக் கழகம் சார்பில் கடந்த சட்டமன்றத் தேர்தலில் வெளியிட்ட தேர்தல் அறிக்கையிலும் இதனை வலியுறுத்தி இருந்தோம்.

MK Stalin

தமிழ்நாட்டைப் பொறுத்தவரையில். பட்டியலின மக்களுக்கு இணையாக கிறித்துவ ஆதிதிராவிடர்களும் சலுகைகள் பெறும் வகையில், அரசாணைகள் வெளியிட்டு உரிய பயன்கள் வழங்கப்பட்டு வருகின்றன. இடஒதுக்கீடு வழியாக மற்ற உரிமைகள் தரப்பட்டு வருகின்றன. ஒன்றிய அரசால் பட்டியலின மக்களுக்கு வழங்கப்படும் அனைத்துக் கல்வி உதவித் தொகைத் திட்டங்களும், கிறித்துவ ஆதிதிராவிடர்களுக்கும் வழங்கப்பட்டு வருகிறது. முழுநேர முனைவர் பட்ட ஆராய்ச்சி மாணவர்களுக்கு வழங்கப்படும் ஊக்கத்தொகை, வெளிநாடுகளில் சென்று உயர்கல்வி பயில்பவர்களுக்கான ஊக்கத்தொகை, உயர்கல்வி சிறப்பு ஊக்கத்தொகை அனைத்தும் இவர்களுக்கும் வழங்கப்பட்டு வருகிறது. இத்துடன் இடஒதுக்கீட்டையும் வழங்குவதே சரியானதாகவும் முறையானதாகவும் இருக்கும் என்று நினைக்கிறோம்.

‘இந்தியா முழுவதும் சுற்றுப்பயணம் செய்த பிறகே,  அறிக்கையை தாக்கல் செய்ய வேண்டும்!’

அரசியலமைப்பு (பட்டியலின சாதிகள்) திருத்த ஆணை 1950-ன்படி, இந்து மதத்தில் இருந்து வேறுபட்ட மதத்தைக் கூறும் எவரும் அட்டவணை சாதிகளின் உறுப்பினராக ஆக முடியாது. ஆனால், 1956 ஆம் ஆண்டு சீக்கிய மதத்தைப் பின்பற்றுபவர்களையும், 1990ஆம் ஆண்டு பவுத்த மதத்தைப் பின்பற்றுபவர்களையும், பட்டியல் சாதியினராகச் சேர்க்கும் வகையில் திருத்தம் செய்யப்பட்டது. இதே போன்ற திருத்தத்தைத்தான் கிறித்தவர்களாக மதம் மாறிய ஆதிதிராவிடர்களும் எதிர்பார்க்கிறார்கள். இந்தக் கோரிக்கையை பல்வேறு தரப்பினரும் அரசுக்கு வைத்திருக்கிறார்கள்.

MK Stalin

தேசிய ஆதி திராவிடர் ஆணையத் துணைத் தலைவர் கடந்த ஆண்டு “ஆதி திராவிடர் வகுப்பைச் சேர்ந்தவர்கள் மதம் மாறும்போது, தானாக ஆதி திராவிடர் வகுப்பில் இருந்து வெளியேறி விடுகிறார்கள். மதம் மாறிய பின்னும் அவர்களுக்கு ஆதி திராவிடர் வகுப்பைச் சேர்ந்தவர் என்று சாதிச் சான்றிதழ் இருந்தால் அது செல்லாது. மதம் மாறியவர்களுக்கு ஆதிதிராவிடர் வகுப்பு சான்றிதழ் வழங்கப்பட்டால் அது போலிச் சான்றிதழ்” என சொல்லி இருந்தார். அப்போது பல்வேறு தரப்பினரும் அதற்குக் கடுமையாக எதிர்ப்பை தெரிவித்தார்கள். இதைத் தொடர்ந்து உச்சநீதிமன்ற முன்னாள் நீதியரசர் கே.ஜி.பாலகிருஷ்ணன் தலைமையிலான ஆணையம் ஒன்றை ஒன்றிய அரசு அமைத்துள்ளது. இந்த ஆணையம் இந்தியா முழுமையும் சுற்றுப்பயணம் செய்து, அனைத்து மாநிலங்களின் கருத்தையும் பெற்ற பிறகே இறுதி அறிக்கையை தாக்கல் செய்ய வேண்டும் என்று கேட்டுக் கொள்கிறேன்.

‘கிறித்தவ ஆதிதிராவிடர்களுக்கும் சலுகைகள் வழங்க வேண்டும் என்ற தீர்மானம் ஒருமனதாக வலுயுறுத்தப்படுகிறது!’

இதனை வலியுறுத்தும் வகையில், பின்வரும் தீர்மானத்தை நான் முன்மொழிகிறேன்.

தீர்மானம்

“இந்திய அரசியலமைப்புச் சட்டத்தில் பட்டியலின மக்களுக்கு வழங்கப்பட்டுள்ள சட்ட ரீதியான பாதுகாப்பு, உரிமைகள் மற்றும் இடஒதுக்கீடு உள்ளிட்ட சலுகைகளைக் கிறித்துவராக மதம் மாறிய ஆதிதிராவிடர்களுக்கும் விரிவுபடுத்தி, அவர்களும் அனைத்து வகையிலும் சமூகநீதியின் பயன்களைப் பெற, அரசியலமைப்புச் சட்டத்தில் உரிய திருத்தங்கள் மேற்கொள்ளுமாறு இந்திய அரசை இப்பேரவை ஒருமனதாக வலியுறுத்துகிறது”

என்ற இந்தத் தீர்மானத்தை நான் முன்மொழிகிறேன். சமூகநீதியானது சமநீதியாக வழங்கப்பட வேண்டும் என்பதை அடிப்படையாகக் கொண்ட இந்தத் தீர்மானத்தை அனைவரும் ஒருமனதாக நிறைவேற்றித் தர வேண்டுமெனக் கேட்டுக்கொள்கிறேன்” என்று முதலமைச்சர் பேசினார்.