முதலமைச்சர் ஸ்டாலின் முகநூல்
தமிழ்நாடு

’எங்களிடம் இருந்து வசூல் செய்த வரியை விடுவிக்க முடியுமா முடியாதா ’ - முதலமைச்சர் ஸ்டாலின் !

”தன்னை மன்னரென எண்ணிக் கொண்டு ஆணவத்துடன் பேசும் ஒன்றியக் கல்வி அமைச்சர் தர்மேந்திர பிரதான் அவர்களுக்கு நாவடக்கம் வேண்டும்! ” - முதலமைச்சர் ஸ்டாலின்.

ஜெனிட்டா ரோஸ்லின்

பட்ஜெட் தொடரின் முதல் அமர்வு கடந்த ஜனவரி 31 முதல் பிப்ரவரி 13 வரை நடைபெற்றநிலையில் 2 ஆவது அமர்வு, மார்ச் 10 ஆம் தேதியான இன்று தொடங்கியுள்ளது. 24 நாட்கள் இடைவெளிக்குபின் நாடாளுமன்ற பட்ஜெட் கூட்டத்தொடரின் 2 ஆவது அமர்வு இன்று தொடங்கியிருக்கிறது.

இதில் பேசிய மத்திய கல்வி அமைச்சர் தர்மேந்திர பிரதான், தமிழக எம்பிக்கள் நாகரீகமற்றவர்கள் . ஜனநாயக விரோதமானவர்கள். தமிழ்நாட்டு மாணவர்களின் நலனில் அக்கறை இல்லாமல் இருக்கிறார்கள். மாணவர்களின் எதிர்காலத்தை சீரழிக்கிறார்கள். தமிழ்நாட்டு மக்களிடம் அவர்கள் நேர்மையாக இல்லை என்ற கருத்தினையும் முன்வைத்துள்ளார்.

“பிரச்னையை திசைதிருப்பும் செயல்” - திமுக எம்.பி. கனிமொழி

இதனால், திமுக உள்ளிட்ட எம்பிக்கள் கடும் அமளியில் ஈடுபட்டனர்.

பின்னர், பேசிய திமுக எம்பி கனிமொழி, தமிழக எம்பிக்களையும் தமிழக மக்களையும் நாகரீகமற்றவர்கள் என அமைச்சர் தெரிவித்தது குறித்து வேதனை தெரிவித்தார். இதனையடுத்து தான் பேசியது புண்படுத்தியிருந்தால் அதனை திரும்பப் பெற்றுக்கொள்வதாக மக்களவையில் மத்திய அமைச்சர் தர்மேந்திர பிரதான் தெரிவித்தார்.

மத்திய அமைச்சரின் பேச்சுக்கு தமிழக எம்பிக்கள் கடும் கண்டனத்தை தெரிவித்து வரும்நிலையில் , தமிழக முதலமைச்சர் மு.க.ஸ்டாலினும் இதனை கண்டித்து தனது சமூக வலைதளப்பக்கத்தில் பதிவு ஒன்றினை வெளியிட்டுள்ளார்.

" தன்னை மன்னரென எண்ணிக் கொண்டு ஆணவத்துடன் பேசும் ஒன்றியக் கல்வி அமைச்சர் தர்மேந்திர பிரதான் அவர்களுக்கு நாவடக்கம் வேண்டும்! தமிழ்நாட்டின் நிதியைத் தராமல் ஏமாற்றும் நீங்கள் தமிழ்நாட்டு எம்.பி.க்களைப் பார்த்து அநாகரிகமானவர்கள் என்பதா? தமிழ்நாட்டு மக்களை அவமானப்படுத்துகிறீர்கள்.

மாண்புமிகு பிரதமர் நரேந்திர மோடி அவர்கள் இதனை ஏற்கிறாரா? NEP, மும்மொழிக் கொள்கையைத் தமிழ்நாடு அரசு அனுப்பிய PM SHRI MoU முற்றிலுமாக நிராகரித்து விட்டது என எனக்குக் கடிதம் எழுதியது நீங்கள் தானே? பிரதான் அவர்களே, நாங்கள் மக்களின் எண்ணங்களுக்கு மட்டுமே மதிப்பளித்துச் செயல்படுகிறோம்! உங்களைப் போல நாக்பூரின் சொற்களுக்குக் கட்டுப்பட்டு அல்ல!! நாங்கள் உங்கள் திட்டத்தைச் செயல்படுத்த முன்வரவும் இல்லை, அப்படி முன்வராத என்னை யாரும் வற்புறுத்தவும் முடியாது. தமிழ்நாட்டு மாணவர்களுக்குரிய நிதியை, எங்களிடம் இருந்து வசூல் செய்த வரியை விடுவிக்க முடியுமா முடியாதா என்பதற்கு மட்டும் பதில் கூறுங்கள்! " என்று பதிவிட்டுள்ள தமிழக முதலமைச்சர் மு.க ஸ்டாலின், தர்மேந்திர பிரதான் அனுப்பிய கடித்தையும் இத்தோடு இணைத்துள்ளார்.