இன்று மாலை தேர்தல் தேதி அறிவிக்கப்படவுள்ள நிலையில் சென்னை தலைமை செயலகத்தில் செய்தியாளார்களை சந்தித்த முதல்வர் பழனிசாமி மக்களின் கோரிக்கைகளை ஒவ்வொன்றாக நிறைவேற்றி வருவதாக கூறியிருக்கிறார்.
அதில், புயல், மழை, வறட்சியால் பாதிக்கப்பட்ட விவசாயிகளின் கோரிக்கையை ஏற்று பயிர்க்கடனை தமிழக அரசு தள்ளுபடி செய்துள்ளது. மேலும் விவசாயிகளின் கோரிக்கையின்படி ஏப்ரல் 1ஆம் தேதிமுதல் மும்முனை மின்சாரமும் அளிக்கப்படும். அதேபோல் கூட்டுறவு வங்கிகளில் பெற்ற 6 சவரன் வரையிலான நகைக்கடனும் தள்ளுப்படி செய்யப்படுகிறது. மகளிர் சுய உதவிக்கடனும் தள்ளுபடி செய்யப்படும் எனவும் அறிவித்துள்ளேன்.
ஆனால் இவை அனைத்தையும் எதிர்க்கட்சி தலைவர் ஸ்டாலின் சொல்லித்தான் நான் ரத்துசெய்ததாக அவர் உண்மைக்கு புறம்பாக பேசிவருகிறார். அரசு அறிவிக்க உள்ளவற்றை முன்கூட்டியே தெரிந்துகொண்டு மு.க. ஸ்டாலின் அவற்றை அறிவித்துவிடுகிறார். மக்களுக்கு எந்த காலகட்டத்தில் உதவிசெய்ய வேண்டுமோ அதை அந்தந்த காலத்தில் செய்கிறோம். இந்தியா முழுவதும் எல்லா மாநிலங்களும் கடன் வாங்கித்தான் மக்களுக்கு உதவி செய்கின்றன. எந்த மாநிலமும் கையில் பணத்தை வைத்துக்கொண்டு திட்டங்களை அறிவிப்பதில்லை. வளர்ச்சித் திட்டங்களுக்கு கடன் வாங்கவேண்டிய அவசியம் இருப்பதால் வாங்கப்படுகிறது.
2011இல் ஒரு லட்சம் கோடி ரூபாய் கடன் இருந்ததாக திமுக தலைவர் மு.க. ஸ்டாலினே தெரிவித்துள்ளார். 10 ஆண்டுகளில் ஏறிய விலைவாசிக்கு ஏற்ப இப்போது ரூ.5.7 லட்சம் கோடி கடன் இருக்கிறது. நாடாளுமன்றத்திலும், சட்டமன்றத்திலும் திமுக குரல் கொடுக்கவில்லை, தேர்தல்வந்தால் குரல் கொடுப்பார்கள்.
விவசாயக்கடன் தள்ளுபடிக்கான சான்றிதழ்கள் 75% விவசாயிகளுக்கு வழங்கப்பட்டு விட்டன. மின்னணு முறை டெண்டர் விடுவதில் ஊழல் நடப்பதற்கான வாய்ப்பே இல்லை என ஏற்கெனவே தெளிவுபடுத்தினேன். இ -டெண்டர் முறையில் எப்படி முறைகேடு செய்யமுடியும்? எங்கிருந்து வேண்டுமானாலும் இ-டெண்டர் எடுக்கலாம். உதாரணத்திற்கு, ரூ.40 ஆயிரம் கோடிக்கு டெண்டர் என்றால் உடனடியாக முழுத்தொகையையும் செலவிட்டு விடுவதில்லை. பல்வேறு நெருக்கடிகள், சோதனைகளைத் தாண்டி வெற்றிகரமாக 4 ஆண்டுகள் ஆட்சியை நிறைவுசெய்துள்ளேன்.
சட்டப்பேரவை இடைத்தேர்தல்களில் தொடர்ந்து வெற்றிபெற்று வந்திருக்கிறோம். இயற்கைச் சீற்றங்கள், கொரோனா பாதிப்பு ஆகிய சோதனைகளிலும் அரசு சிறப்பாக செயல்பட்டுள்ளது. கொரோனா காலத்தில் ரேஷன் அட்டைகளுக்கு ரூ.1000 நிதியுதவி, பொங்கலுக்கு ரூ.2,500 நிதியுதவி அளித்தோம். எனவே அரசின் அறிவிப்புகளுக்கும், தேர்தலுக்கும் எந்த தொடர்பும் இல்லை’’ என்று பேசினார்.
தற்போது பாலியல் குற்றச்சாட்டில் காவலில் வைக்கப்பட்டிருக்கும் ஐபிஎஸ் அதிகாரி குறித்து கேட்டபோது, விசாரணை கமிஷன் அமைக்கப்பட்டு விசாரணை நடந்துவருகிறது என்று பதிலளித்தார்.