தமிழ்நாடு

அம்மா மினி கிளினிக் திட்டம்... இன்று முதல்வர் பழனிசாமி தொடங்கி வைக்கிறார்!

Rasus

தமிழகம் முழுவதும் 'அம்மா மினி கிளினிக்' திட்டம் இன்று முதல் தொடங்கப்படுகிறது. சென்னையில் ராயபுரம், வியாசர்பாடி, மயிலாப்பூர் ஆகிய இடங்களில் மினி கிளினிக்குகளை முதலமைச்சர் பழனிசாமி இன்று தொடங்கி வைக்கிறார்.

மக்களின் அடிப்படை மருத்துவ தேவைகளை பூர்த்தி செய்ய தமிழகம் முழுவதும் இரண்டாயிரம் மினி கிளினிக் ஏற்படுத்தப்படும் என முதல்வர் பழனிசாமி அறிவித்திருந்தார். அதன்படி தமிழகம் முழுவதும் 2000 மினி கிளினிக்குகள் அமைக்க திட்டமிடப்பட்டுள்ளது. இந்த அம்மா மினி கிளினிக்கில், ஒரு மருத்துவர், ஒரு செவிலியர், ஒரு சுகாதாரப் பணியாளர் மற்றும் மருத்துவ உபகரணங்கள் போன்றவை இடம் பெற்றிருக்கும்.

இந்த கிளினிக்குகளில் சளி, காய்ச்சல், தலைவலி போன்றவற்றிற்கு சிகிச்சை அளிக்கவும், சர்க்கரை, ரத்த அழுத்தம் போன்ற பாதிப்புகள் உள்ள நோயாளிகளுக்கு மாதாந்திர மருந்துகள் வழங்கவும் அறிவுறுத்தப்பட்டுள்ளது. காலை 9 மணி முதல் 11 வரையும், மாலையில் 4 மணி முதல் 7 மணி வரையும் மினிகிளினிக்குகள் செயல்படும் எனத் தெரிவிக்கப்பட்டுள்ளது.

இத்திட்டத்தை, சென்னையில், ராயபுரம், வியாசர்பாடி, மயிலாப்பூர் ஆகிய இடங்களுக்குச் சென்று முதல்வர் பழனிசாமி தொடங்கி வைக்கிறார். சென்னை மாநகராட்சியில் மட்டும் 200 மினி கிளினிக் செயல்பட உள்ளன. இதேபோன்று, 1,400 மினி கிளினிக்குகள் கிராமப்புறங்களிலும், 200 மினி கிளினிக்குகள் நகர்புறங்களிலும் மற்றும் 200 நகரும் மினி கிளினிக்குகளும் அமைக்க தமிழக அரசு திட்டமிட்டுள்ளது.