தமிழ்நாடு

கேள்விகேட்ட நிருபர் - ஆவேசமடைந்த முதல்வர்!

Sinekadhara

செய்தியாளர் சந்திப்பின் போது பெருமை பேசுகிறீர்கள் என்ற வார்த்தையை பயன்படுத்திய நிருபரிடம் ஆவேசமாக பதிலளித்துள்ளார் முதல்வர் பழனிச்சாமி. 

முதல்வர் பழனிச்சாமி இன்று நிருபர்களுக்குக் கொடுத்த பேட்டியில் நீட் தேர்வு, மழை முன்னெச்சரிக்கை நடவடிக்கைகள், 10,11 மற்றும் 12ஆம் வகுப்புப் பொதுத் தேர்வுகள் குறித்த பல கேள்விகள் அவரிடம் கேட்கப்பட்டது.

அப்போது நீட் தேர்வில் தமிழக அரசு மாணவர்களுக்கான 7.5% உள் ஒதுக்கீடு பற்றி முதல்வர் விளக்கிக்கொண்டிருக்கையில், ஒரு நிருபர் நீட் தேர்வுக்கு 7.5% ஒதுக்கீடு அளித்ததைக் குறித்து தமிழக அரசு பெருமை பேசுகிறது என்றுக் கூறியதைக் கேட்டு முதல்வர் ஆவேசமடைந்தார்.

பெருமை என்ற வார்த்தையை சுட்டிக்காட்டி சரியான கேள்வியை கேட்கவேண்டும் என்று கூறிய முதல்வர், ’’பெருமை பேசுகிறேன் என்று தவறான வார்த்தையை பயன்படுத்துகிறீர்கள். நீட் தேர்வு வருவதற்கு முன்பு அரசுப் பள்ளிகளிலிருந்து எத்தனை பேர் மருத்துவ கல்லூரிகளில் சேர்ந்தார்கள் என்ற கணக்கு தெரியுமா? பெருமை பேசுகிறேன் என்று சொல்லாதீர்கள். நான் உண்மையாகவே பெருமைகொள்கிறேன். ஏழை, எளிய மாணவர்கள் படிக்கவேண்டும் என்பதற்காக கஷ்டப்பட்டுக் கொண்டிருக்கிறேன்’’ என்று ஆவேசமாக பதிலளித்துள்ளார் முதல்வர்.