தமிழ்நாடு

கடும் குடிநீர் பஞ்சம் - ஆலோசிக்க உள்ள முதல்வர்

கடும் குடிநீர் பஞ்சம் - ஆலோசிக்க உள்ள முதல்வர்

webteam

குடிநீர் பிரச்னையை தீர்க்க தமிழக அரசு தொடர்ந்து நடவடிக்கை எடுத்து வரும் நிலையில் இது குறித்து முதலமைச்சர் பழனிசாமி இன்று அதிகாரிகளுடன் ஆலோசனை செய்ய உள்ளார்.

தமிழகத்தில் பருவமழை பொய்த்த நிலையில் மாநிலம் முழுவதும் கடும் வறட்சி நிலவி வருகிறது. தமிழகத்தின் பல்வேறு பகுதிகளில் கடுமையான தண்ணீர் தட்டுப்பாடு நிலவுகிறது. குறிப்பாக தலைநகரமான சென்னையில் கடும் குடிநீர் தட்டுப்பாடு ஏற்பட்டுள்ளது. சென்னையில் கடுமையான குடிநீர் தட்டுப்பாடு நிலவுவதால் வணிக வளாகங்கள், ஐடி நிறுவனங்கள் விடுமுறை அறிவித்துள்ளன. சென்னைக்கு குடிநீர் வழங்கும் ஏரிகள் வறண்டுவிட்டதால், விவசாய கிணறுகள் மற்றும் கல்குவாரி நீர் மூலம் தண்ணீர் கொண்டுச்செல்லும் பணி தொடர்ந்து நடைபெற்று வருகிறது. 

சென்னையின் குடிநீர் பிரச்னையை தீர்க்க தமிழக அரசு பல்வேறு நடவடிகையில் ஈடுபட்டுள்ளது. இந்த சூழலில் தமிழகம் முழுவதும் குடிநீர் வழங்குவதற்காக 233 கோடியே 72 லட்சம் ரூபாய் ஒதுக்கீடு செய்யப்பட்டுள்ளதாக, உள்ளாட்சித் துறை அமைச்சர் எஸ்.பி.வேலுமணி தெரிவித்திருந்தார். இந்நிலையில், குடிநீர் பிரச்னை குறித்து முதலமைச்சர் பழனிசாமி இன்று ஆலோசனை நடத்த உள்ளார்.

இது தொடர்பாக காலை 11.45 மணிக்கு தலைமைச் செயலகத்தில்  நடைபெறும் இந்த கூட்டத்தில், முதலமைச்சர் எடப்பாடி பழனிசாமியுடன் மூத்த அமைச்சர்கள், தலைமைச் செயலாளர் உள்ளிட்ட அதிகாரிகளும் கலந்து கொள்வார்கள் எனத் தெரிகிறது. இதைத்தொடர்ந்து நெகிழி தடை தொடர்பாகவும் முதலமைச்சர் ஆய்வு நடத்துகிறார் என்றும் தகவல்கள் தெரிவிக்கின்றன.