தமிழ்நாடு

உயிரிழந்த மீனவர்களின் குடும்பங்களுக்கு ரூ.10 லட்சம் நிவாரணம்: முதலமைச்சர்

webteam

ஒகி புயலால் உயிரிழந்த தமிழக மீனவர்களின் குடும்பங்களுக்கு ரூ.10 லட்சம் நிவாரணம் வழங்க முதலமைச்சர் பழனிசாமி உத்தரவிட்டுள்ளார்.

கன்னியாகுமரி மாவட்டம் குழித்துறையில் மீனவர்களின் போராட்டம் நீடித்து வரும் நிலையில், முதல்வர் பழனிசாமி தலைமையில் பசுமைவழிச் சாலையில் உள்ள முதலமைச்சர் இல்லத்தில் ஆலோசனைக் கூட்டம் நடைபெற்றது. இந்தக் கூட்டத்திக்கு பின் முதலமைச்சர் சார்பில் நிவாரண உதவிகள் அறிவிக்கப்பட்டன. அதில், உயிரிழந்த மீனவர்களின் குடும்பங்களுக்கு காப்பீடு ரூ.2 லட்சம் உட்பட ரூ.10 லட்சம் வழங்கப்படும் என அறிவிக்கப்பட்டது. ஊனமடைந்துள்ள மீனவர்களுக்கு மாற்று தொழில் செய்ய ரூ.5 லட்சம் உதவித் தொகை வழங்கப்படும் என்றும், காயமடைந்து சிகிச்சை பெறும் மீனவர்களுக்கு தலா 50 ஆயிரம் ரூபாய் வழங்கவும் உத்தரவு பிறக்கப்பட்டுள்ளது. 

குஜராத்தில் உள்ள மீனவர்கள் ஊர்த்திரும்ப படகுகளுக்கு டீசல் அளவு 1,000 லிட்டராக அதிகரிக்கப்பட்டுள்ளது. குஜராத்தில் உள்ள மீனவர்களுக்கு உணவுப்படி தலா 2 ஆயிரம் ரூபாய் வழங்கப்படும் என்றும் அறிவிக்கப்பட்டது. கர்நாடகா, கேரளாவில் ஒதுங்கியுள்ள மீனவர்களுக்கு டீசல் அளவு 750 லிட்டராக உயர்த்தப்பட்டது. குஜராத், கர்நாடகா, கேரளாவில் உள்ள மீனவர்களுக்கு உணவுப்படி 2 ஆயிரம் ரூபாயாக உயர்த்தப்படுவதாகவும் அறிவிக்கப்பட்டுள்ளது. காணாமல் போன மீனவர்களின் குடும்பங்களுக்கு வாழ்வாதார உதவித் தொகையாக ரூ.5000 வழங்கப்படும் என்றும் முதலமைச்சர் அறிவித்துள்ளார். மேலும் நாட்டுப்படகு ஒன்றுக்கு 200 லிட்டர் டீசல் வழங்கப்படும் எனவும், காணாமல் போன மீனவர்களை மீட்கும் பணிகள் தொடர்ந்து நடைபெறும் என முதலமைச்சர் உறுதியளித்துள்ளார்.