தமிழ்நாடு

‘உயிரிழந்த தமிழக வீரர்களின் குடும்பத்திற்கு ரூ.20 லட்சம்’ - முதலமைச்சர் பழனிசாமி அறிவிப்பு

webteam

பயங்கரவாத தாக்குதலில் உயிரிழந்த தமிழக சிஆர்பிஎப் வீரர்களின் குடும்பங்களுக்கு தலா ரூ.20 லட்சம் உடனடியாக வழங்க முதலமைச்சர் பழனிசாமி உத்தரவிட்டுள்ளார்.

ஜம்மு-காஷ்மீர் மாநிலம் புல்வாமாவில் நடத்தப்பட்ட பயங்கரவாத தாக்குதலில் 40க்கும் மேற்பட்ட இந்திய பாதுகாப்புப் படையினர் உயிரிழந்தனர். இதுதொடர்பாக இரங்கல் அறிக்கை வெளியிட்டுள்ள முதலமைச்சர் பழனிசாமி, “பயங்கர தாக்குதலில் மத்திய ரிசர்வ் காவல் படையினர் பலர் உயிரிழந்த செய்தியை அறிந்து வேதனை அடைந்தேன். இச்சம்பவத்திற்கு கடும் கண்டனம் தெரிவித்துக்கொள்கிறேன். உயிரிழந்தவர்களின் குடும்பத்திற்கு ஆழ்ந்த இரங்கலை தெரிவித்துக்கொள்கிறேன்.

இந்த தாக்குதலில் தூத்துக்குடி மாவட்டம் சவலப்பேரியை சேர்ந்த கணபதி என்பவரின் மகன் சுப்ரமணியன் மற்றும் அரியலூர் மாவட்டம், கார்குடியை சேர்ந்த சின்னையன் என்பவரின் மகன் சிவசந்திரன் ஆகியோர் உயிரிழந்துள்ளனர். இது எனக்கு மிகுந்த மனவேதனையை அளித்ததுள்ளது. அவர்களின் குடும்பத்திற்கு ஆழ்ந்த இரங்கலை தெரிவித்துக்கொள்கிறேன். மேலும், அவர்களின் குடும்பத்திற்கு தலா ரூ.20 லட்சம் வழங்க உடனடியாக உத்தரவிட்டுள்ளேன்” என தெரிவித்துள்ளார்.