மேட்டூர் அணை
மேட்டூர் அணை முகநூல்
தமிழ்நாடு

மேட்டூர் அணையில் 2 டிஎம்சி நீர் திறக்க முதல்வர் ஸ்டாலின் உத்தரவு

PT WEB

டெல்டா மாவட்டங்களில் பயிரிடப்பட்ட சம்பா பயிர்களை காத்திட மேட்டூர் அணையில் இருந்து இன்று முதல் 2 டிஎம்சி தண்ணீர் திறந்துவிட முதலமைச்சர் உத்தரவிட்டுள்ளார்.

தமிழக அரசு வெளியிட்டுள்ள செய்திக்குறிப்பில், "வடகிழக்கு பருவமழை குறைவாக பெய்த காரணத்தாலும், காவிரி நீர் பற்றாக்குறையாலும், டெல்டா மாவட்டங்களில் பயிரிடப்பட்ட சம்பா பயிர்கள் பாதிக்கப்பட்டு வருவதால், மேட்டூர் அணையில் இருந்து நீர் திறக்க, விவசாயிகள் கோரிக்கை விடுத்துள்ளனர்.

இதனடிப்படையில் பாதிக்கப்பட்ட மாவட்டங்களின் சம்பா நெற்பயிரின் நிலையினை அறிந்திட, தஞ்சை, திருவாரூர் மற்றும் நாகை மாவட்டங்களில் கிராம அளவில் 30 குழுக்கள் அமைக்கப்பட்டு, 298 கிராமங்களில் களஆய்வு மேற்கொள்ளப்பட்டது.

இந்த குழுக்களின் அறிக்கையின் அடிப்படையில் திருவாரூர் மாவட்டத்தில் 4 ஆயிரத்து 715 ஏக்கரும், நாகை மாவட்டத்தில் 18 ஆயிரத்து 59 ஏக்கரும் என மொத்தம் 22 ஆயிரத்து 774 ஏக்கர் சம்பா பயிர்கள் பாசன நீர்ப்பற்றாக்குறையால் பாதிக்கப்படும் என அறியப்பட்டுள்ளது.

எனவே, விவசாயிகளின் நலன் கருதி நெற்பயிரினைகாத்திட மேட்டூர் அணையில் இருந்து இரண்டு டிஎம்சி தண்ணீரை இன்று முதல் திறந்துவிட முதலமைச்சர் உத்தரவிட்டுள்ளார். பாசன நீரை சிக்கனமாக பயன்படுத்தி சம்பா நெற்பயிரை பாதுகாத்து பயன்பெற வேண்டும்”, என்று அரசு தரப்பில் கேட்டுக்கொள்ளப்பட்டுள்ளது.