செய்தியாளர் ராஜ்குமார்
சென்னை எழில் நகரில் நமக்கு நாமே திட்டத்தின் கீழ் மாண்டிசேரி ஐந்து மழலையர் வகுப்பறைகள் மற்றும் விளையாட்டு திடல் போன்றவை ரூ. 69 லட்சத்தில் கட்டப்பட்டது. இதை தமிழ்நாடு முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் திறந்துவைத்தார். பின் முதலமைச்சர் பள்ளி வளாகத்தில் மரக்கன்றுகளை நட்டார். தொடர்ந்து ஆசிரியர்கள் உடன் குழு புகைப்படம் எடுத்துக் கொண்டார்.
நிகழ்வில் அமைச்சர் மா.சுப்பிரமணியன், மேயர் பிரியா, துணை மேயர் மகேஷ்குமார், ஆணையாளர் குமரகுருபரன் உள்ளிட்ட அதிகாரிகள் முதல்வருடன் இருந்தனர்.
பின்னர் செய்தியாளர்களுக்கு பேட்டியளித்த முதலமைச்சர் மு.க.ஸ்டாலின், “அனைத்து மாவட்ட ஆட்சியர்களுக்கும் அறிவுறுத்தல் வழங்கப்பட்டுள்ளது. மழை முன்னெச்சரிக்கை நடவடிக்கை எடுக்க ஏற்கனவே உத்தரவிடப்பட்டு இருக்கிறது. மழை பெய்யும் பெய்யாது என்பதைத் தாண்டி அதிகாரிகள் உட்பட அனைவரும் தயாராக இருக்கின்றனர்” என தெரிவித்தார்.
தொடர்ந்து ‘நாடாளுமன்ற கூட்டத் தொடரில் திமுக உறுப்பினர்கள் கோரிக்கைகள் என்னவாக இருக்கும்?’ என புதிய தலைமுறை சார்பாக கேள்வி எழுப்பப்பட்டது. அதற்கு முதல்வர், “திமுக நாடாளுமன்ற உறுப்பினர்களுக்கு கூட்டம் நடத்தி அறிவுறுத்தல் வழங்கி இருக்கிறோம். தமிழ்நாடு நலன் சார்ந்து பேசுவதற்கு அறிவுரை வழங்கப்பட்டுள்ளது” என பதில் அளித்தார்.
பின் அதானி விவகாரம் குறித்த பா.ம.க நிறுவனர் ராமதாஸ் அறிக்கை குறித்த கேள்விக்கு, “அதானி விவகாரத்தில் அமைச்சர் ஏற்கனவே உரிய முறையில் பதில் அளித்துள்ளார். அவருக்கு (ராமதாஸ்) வேறு வேலை இல்லை. ஏதாவது ஒரு அறிக்கை நாள்தோறும் விடுக்கிறார். எனவே பதில் சொல்ல வேண்டிய அவசியம் இல்லை” என தெரிவித்தார்.