தமிழ்நாடு

கோயம்பேடு மூலம் கொரோனா பரவியது ஏன் ? - முதலமைச்சர் விளக்கம்

webteam

அரசு அளித்த கொரோனா எச்சரிக்கையை கோயம்பேடு வியாபாரிகள் முதலில் ஏற்கவில்லை என முதலமைச்சர் பழனிசாமி விளக்கமளித்துள்ளார்.

கொரோனா பாதிப்பு தகவல்கள் தொடர்பாக முதலமைச்சர் பழனிசாமி இன்று செய்தியாளர்களைச் சந்தித்தார். அப்போது பேசிய அவர், “அரசு நடவடிக்கை எடுக்காததால் கோயம்பேட்டில் கொரோனா தொற்று அதிகரித்தது என்று சொல்வது தவறு. கோயம்பேட்டில் கொரோனா தொற்று ஏற்படும் என்றும் கணித்து முன்னரே வியாபாரிகளை எச்சரித்தோம்.

பலமுறை அரசு தரப்பில் பேச்சுவார்த்தை நடத்தியும் வியாபாரிகள் அதை ஏற்க மறுத்துவிட்டனர். தங்களுக்கு இழப்பு ஏற்படும் என அஞ்சி தற்காலிக சந்தைக்குச் செல்ல வியாபாரிகள் மறுப்பு தெரிவித்தனர். ஆனால் தற்போது எங்கள் பேச்சை ஏற்றுக்கொண்டுள்ளனர். அதன்படி, இனி திருமழிசையில் சந்தை செயல்படும்” என்றார்.