தமிழ்நாடு

அதிமுக- திமுகவினர் இடையே மோதல்: அதிமுக நிர்வாகியின் உறவினர் வேன்களுக்கு தீ வைப்பு!

webteam

தூத்துக்குடி மாவட்டம், விளாத்திகுளம் அருகே ஏற்பட்ட தேர்தல் தகராறில் அதிமுக ஊராட்சி ஒன்றிய தலைவரின் உறவினருக்கு சொந்தமான 2 வேன்கள் தீயிட்டு கொளுத்தப்பட்டன.

தூத்துக்குடி மாவட்டம் விளாத்திகுளம் அருகே உள்ள என்.ஜெகவீர புரம் கிராமத்தைச் சேர்ந்தவர் தாஸ். அதிமுகவைச் சேர்ந்த புதூர் ஊராட்சி ஒன்றிய தலைவர் சுசிலா தனஞ்செயன் உறவினரான தாஸ், விளாத்திகுளம் தொகுதி அதிமுக வேட்பாளர் சின்னப்பனுக்கு ஆதரவாக பரப்புரை மேற்கொண்டு வந்தார்.

சில தினங்களாக அதிமுக திமுக நிர்வாகிகள் இடையே மோதல் ஏற்பட்டு வந்த நிலையில், தாஸை திமுகவினர் சிலர் தாக்கியதாகவும், அவருக்குச் சொந்தமான இரு வேன்களுக்கு தீவைத்ததாகவும் கூறப்படுகிறது. இதில் ஒரு வேன் முற்றிலும் எரிந்து சேதமடைந்தது. இந்த தாக்குதலில் காயமடைந்த தாஸ் அருப்புக்கோட்டை மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளார். மோதலைத் தொடர்ந்து அப்பகுதியில் பலத்த காவல்துறை பாதுகாப்பு போடப்பட்டுள்ளது.